'ரெமோ' படத்திற்கு வழங்கப்பட்ட வரி விலக்கை ரத்து செய்ய வேண்டும்.. ஹைகோர்ட்டில் வழக்கு! ஏன் தெரியுமா?
சென்னை: ரெமோ படத்திற்கு வரி விலக்கு வழங்கியதை எதிர்த்து ஹைகோர்ட்டில் பொதுநல வழக்கு தொடரப்பட்டுள்ளது. 'ரெமோ' எனும் சொல் லத்தீன் வார்த்தை என மனுதாரர் வாதத்தை முன் வைத்துள்ளார்.
சிவகார்த்திகேயன், கீர்த்தி சுரேஷ் உள்ளிட்டோர் நடிப்பில் கடந்த 7ம் தேதி ரிலீசான திரைப்படம் 'ரெமோ'. பெண்களை பின்தொடர்வதை ஊக்குவிக்கிறது என்ற விமர்சனம், சிவகார்த்தியேகனின் பிரஸ் மீட் அழுகை என படத்தை சுற்றிலும் ஒரு பரபரப்பு நிலவிக்கொண்டேதான் இருக்கிறது.

இந்நிலையில், ரெமோ திரைப்படத்திற்கு தமிழக அரசு வரி விலக்கு அளித்து மக்களின் வரிப்பணத்தை வீணாக்கிவிட்டதாக கூறி சென்னை ஹைகோர்ட்டில் பொது நல வழக்கு ஒன்று தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
நீதிபதி சிவஞானம் முன்னிலையில் இந்த மனு நேற்று விசாரணைக்கு வந்தது. மனுதாரர் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், ரெமோ என்ற சொல், ரெமிங்டன் என்ற சொல்லின் சுருக்கம் என்றும், இது லத்தீன் சொல் எனவும், தற்போது, ஜெர்மன் மற்றும் இத்தாலிய மொழிகளில் இச்சொல் அதிகம் புழக்கத்தில் இருப்பதாகவும், எனவே, வரி விலக்கு தொடர்பாக தமிழக அரசு பிறப்பித்த அரசாணையை ரத்து செய்ய வேண்டும் எனவும் கோரிக்கைவிடுத்தார்.
அரசு தரப்பில் கால அவகாசம் கேட்கப்பட்டதால், நீதிபதி வழக்கை வரும் நவம்பர் 21ம் தேதிக்கு ஒத்தி வைத்தார். ரெமோ என்ற சொல்லுக்கு படத்திலேயே ஒரு விளக்கம் தரும் காட்சி வைத்திருப்பார்கள். அதாவது ரெஜினா மோத்வானி என்ற பெண்ணின் பெயரை சுருக்கிதான், ரெமோ என்று கூப்பிடுவதாக படத்தில் காட்சி உள்ளது.
ஆனால், இதை வாதமாக முன்வைத்தால், ரெஜினா மோத்வானி தமிழ் பெயரா என்ற சர்ச்சை வெடிக்க வாய்ப்புள்ளது. நபர்கள், ஊர்களின் பெயர்களை சூட்டும்போது, மொழி குறித்து யோசிக்க வேண்டியதில்லை என்ற எதிர்வாதத்திற்கும் வாய்ப்புள்ளது. நவம்பர் 21ம் தேதிவரை பொறுத்திருக்கலாம்.












Click it and Unblock the Notifications