ரூ.2.18 கோடி மோசடி புகார் - ஜே.கே. ரித்தீஷ், மனைவி ஜோதிஸ்வரி மீது வழக்குப் பதிவு
ரூ2.18 கோடி மோசடி செய்ததாக வெளிநாடுவாழ் இந்தியர் ஆதிநாராயணன் அளித்த புகாரின் பேரில் நடிகர் ஜே.கே.ரித்தீஷ் மீது சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.
சென்னை: நடிகர் ரித்தீஷ் ரூ2.18 கோடி மோசடி செய்ததாக வெளிநாடுவாழ் இந்தியர் ஆதிநாராயணன் புகார் அளித்துள்ளார். ஆதிநாராயணன் கொடுத்த புகாரின் பேரில் ஜே.கே.ரித்தீஷ் மனைவி ஜோதிஸ்வரி உட்பட 7பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
சென்னை பேரூரைச் சேர்ந்தவர் ஆதிநாராயண சுப்பிரமணியன். வெளிநாட்டு வாழ் இந்தியரான இவர், அமெரிக்காவின் நியூஜெர்சியில் பணியாற்றினார். 2013ஆம் ஆண்டு தனது நிறுவனத்தை விற்றுவிட்டு தமிழகம் திரும்பினார்.

தமிழகத்தில் அதுவும் சென்னையில் தொழில் தொடங்க ஆசைப்பட்ட ஆதிநாராயணனிடம், ஸ்ரீபெரும்புதூர் அருகே ஒரு நிறுவனம் தொடங்குவதாக கூறி ஜே.கே.ரித்தீஷ் 2.18 கோடி ரூபாய் பணம் பெற்றுள்ளார். இதனை வங்கி மூலமாக ரித்தீஷ்க்கு அளித்தார் ஆதிநாராயணன். பணத்தை பெற்றுக்கொண்ட ரித்தீஷ் குறிப்பிட்டப்படி நிறுவனம் தொடங்காமல் ஏமாற்றிவிட்டார் என்பது புகார்.
இது குறித்து சென்னை காவல் ஆணையர் அலுவலகம், மத்திய குற்றப்பிரிவு போலீசாரிடமும் பலமுறை புகார் அளித்தும் எந்த வழக்கும் பதிவு செய்யவில்லை, இதனையடுத்து ஜே.கே.ரித்தீஷ் என்ற சிவக்குமார் மீது வழக்குப் பதிவு செய்ய உத்தரவிட வேண்டும் என்று கடந்த ஆண்டு உயர்நீதிமன்றத்தில் ஆதிநாராயணன் மனு அளித்தார்.
இதனையடுத்து ஆதிநாராயாணன் அளித்த புகாரின் அடிப்படையில் மறு விசாரணை செய்யுமாறு உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது. சொந்த ஊரில் தொழில் தொடங்க வேண்டும் என்று வந்த ஆதிநாராயணன், தனது சேமிப்பை இழந்து விட்டதாக கூறினார். மீண்டும் அமெரிக்கா சென்று விட்டார்.
ஜே.கே. ரித்தீஷ் அப்போது எம்.பியாக இருந்த காரணத்தால் எந்த வித நடவடிக்கையும் எடுக்கப்பட்டதாக தெரியவில்லை. இந்த நிலையில் ஆதிநாராயணன் அளித்த புகாரின் மீது தற்போது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. ஆதிநாராயணன் கொடுத்த புகாரின் பேரில் ஜே.கே.ரித்தீஷ் மனைவி ஜோதிஸ்வரி உட்பட 7பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications