பஸ்சுக்குள் தூங்கிய கண்டெக்டர்... பையிலிருந்த ரூ 30,000 பணம் அபேஸ்!
சேலம்: சேலத்தில் பேருந்துக்குள் தூங்கிய கண்டெக்டரிடமிருந்து ரூ 30 ஆயிரத்தை திருடிச் சென்ற மர்ம நபரைப் போலீசார் தேடி வருகின்றனர்.
அந்தியூர் அரசு போக்குவரத்து கழக பணிமனைக்கு சொந்தமான அரசு பஸ் ஓன்று நேற்று இரவு 10.30 மணியளவில் பயணிகளை ஏற்றிக் கொண்டு பழனியில் இருந்து புறப்பட்டு இன்று அதிகாலை சுமார் 3.15 மணியளவில் சேலம் புதிய பஸ் நிலையத்திற்கு வந்து சேர்ந்தது.
பயணிகள் அனைவரும் இறங்கியதும், பஸ்சை புதிய பஸ் நிலையத்தில் உள்ள கோவை செல்லும் வழித் தடத்தில் நிறுத்திய அப்பேருந்தின் கண்டெக்டர் குமரேசன் (30) மற்றும் டிரைவர் ராஜா செரிப்(26) ஆகிய இருவரும் பயணக் களைப்பில் பேருந்திலேயே சிறிது நேரம் தூங்கியுள்ளனர். இதில், கண்டெக்டரிடம் முதல்நாள் பயணிகளிடம் வசூல் செய்த டிக்கெட் பணம் ரூ 30 ஆயிரம் இருந்துள்ளது.
இந்நிலையில், இன்று காலை சுமார் 6 மணியளவில் எழுந்து பார்த்த குமரேசன், தனது பையில் வைத்திருந்த பணம் மாயமானதைக் கண்டு அதிர்ச்சியடைந்தார்.
பேருந்தை நோட்டமிட்ட மர்ம ஆசாமி, பஸ்சுக்குள் ஏறிச் சென்று பணத்தை திருடிச் சென்றிருக்க வேண்டும் எனச் சந்தேகிக்கப் படுகிறது.
இந்த திருட்டு சம்பவம் குறித்து பள்ளப்பட்டி போலீஸ் நிலையத்தில் குமரேசன் புகார் அளித்தார். வழக்குப்பதிவு செய்த போலீசார் பணத்தை திருடிச் சென்ற மர்ம நபரைத் தேடி வருகின்றனர்.












Click it and Unblock the Notifications