காவிரியில் தமிழகத்தின் உரிமையை காக்க 11 மாணவர்கள் சாகும் வரை உண்ணாவிரதம்
சென்னை: காவிரியில் தமிழகத்தின் உரிமையை காக்க வலியுறுத்தி, சென்னை மதிமுக தலைமை அலுவலகத்தில் 11 மாணவர்கள் சாகும் வரை உண்ணாவிரதப் போராட்டம் நடத்தி வருகின்றனர்.
உயர்நீதிமன்ற உத்தரவுப்படி காவிரியில் இருந்து தமிழகத்துக்கு தண்ணீர் திறந்ததால் கர்நாடகத்தில் வன்முறை வெடித்தது. தமிழர்களின் கடைகள், வீடுகள் சூறையாடப்பட்டன. இதை கண்டித்து நேற்று தமிழகம் முழுவதும் முழுயடைப்பு வெற்றிகரமாக நடந்தது.

செங்கல்பட்டு அரசு சட்டக்கல்லூரி மாணவர்கள் சதீஷ், சூரியா, மகி உள்பட 11 பேர் கர்நாடக அரசையும், மத்திய அரசையும் கண்டித்தும், கர்நாடகத்தில் தமிழர்கள் தாக்கப்படுவதை கண்டித்தும், தமிழகத்துக்கு சேரவேண்டிய காவிரி நீரை உடனே திறந்து விட வலியுறுத்தியும் நேற்று காலை முதல் தொடர் உண்ணாவிரத போராட்டம் தொடங்கினர்.
இந்த உண்ணாவிரத போராட்டத்துக்கு செங்கல்பட்டு சட்டக்கல்லூரி மாணவர்கள், விடுதலை சிறுத்தைகள் கட்சி மத்திய மாவட்ட செயலாளர் தமிழரசன், கிழக்கு மாவட்ட செயலாளர் ராஜகுமாரன், செய்தி தொடர்பாளர் பிரேம்குமார், திருக்கழுக்குன்றம் ஒன்றிய செயலாளர் சதீஷ் உள்பட ஏராளமானோர் ஆதரவு தெரிவித்துள்ளனர். தமிழக வாழ்வுரிமை கட்சி செயலாளர் செல்லா மற்றும் தமிழ் அமைப்பினரும் ஆதரவு தெரிவித்துள்ளனர்.

காவிரி விவகாரத்தில் கர்நாடக அரசு தொடர்ந்து பிடிவாத போக்கை கடைபிடித்து வருகிறது. இந்நிலையில் காவிரியில் தமிழகத்தின் உரிமையை காக்க வேண்டும், உச்ச நீதிமன்ற தீர்ப்பை பின்பற்றி தமிழகத்துக்கு உரிய நீரை வழங்க வேண்டும் உள்ளிட்ட 7 கோரிக்கைகளை வலியுறுத்தி, மாணவர்கள் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இந்த போராட்டத்துக்கு பல்வேறு கல்லூரிகளை சேர்ந்த மாணவர்கள் ஆதரவு அளித்துள்ளதாகவும் தெரிவித்துள்ளனர். இதேபோல் இந்த போராட்டத்துக்கு மதிமுகவும் ஆதரவு தெரிவித்துள்ளது.












Click it and Unblock the Notifications