விஷ்ணு பிரியா தற்கொலையில் திடீர் திருப்பம்: மதுரை வக்கீலிடம் சிபிசிஐடி போலீசார் விசாரணை
சேலம்: திருச்செங்கோடு டி.எஸ்.பி விஷ்ணு பிரியா தற்கொலை வழக்கில் புதிய திருப்பம் ஏற்பட்டுள்ளது. அவர் தற்கொலை செய்து கொள்வதற்கு முன்பாக மதுரை உயர்நீதிமன்ற வக்கீல் மாளவியா, 34 என்பவரிடம் அடிக்கடி பேசி உள்ளார். இதையடுத்து மாளவியாவை சி.பி.சி.ஐ.டி.போலீசார் விசாரித்து வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
திருச்செங்கோடு டி.எஸ்.பி.விஷ்ணுப்பிரியா கடந்த 18ம் தேதி தற்கொலை செய்து கொண்டார். இந்த தற்கொலை குறித்து சி.பி. சி.ஐ.டி. எஸ்.பி நாகஜோதி தலைமையிலான அதிகாரிகள் குழுவினர் விசாரித்து வருகிறார்கள். இவர்கள் விஷ்ணுபிரியா தங்கி இருந்த அறையில் இருந்து லேப்டாப் மற்றும் செல்போன் உள்பட பல பெறாருட்களை கைப்பற்றி விசாரித்து வருகிறார்கள்.விஷ்ணுபிரியாவுடன் செல்போனில் அதிகம் பேசியது யார்-யார்? என பட்டியல் எடுத்து அவர்களிடம் சி.பி.சி.ஐ.டி. போலீசார் விசாரித்து வரு கிறார்கள்.

தலித் மாணவர் கோகுல்ராஜ் கொலை வழக்கில் உயரதிகாரிகள் கொடுத்த அழுத்தம் காரணமாக தற்கொலை செய்துகொண்டதாக கூறப்பட்டது. அதே நேரத்தில் காதல் விவகாரத்தில் விஷ்ணு பிரியா தற்கொலை செய்துகொண்டதாகவும் தகவல் வெளியானது.
இந்த நிலையில் மதுரை உயர்நீதிமன்றக்கிளை வழக்கறிஞர் மாளவியா என்பவரிடம் டி.எஸ்.பி.விஷ்ணுபிரியா அடிக்கடி பேசி உள்ளார். இதையடுத்து மாளவியாவை விசாரணைக்கு சேலத்திற்கு வர சி.பி.சி.ஐ.டி.போலீசார் அழைத்தனர். இதனையடுத்து வழக்கறிஞர் மாளவியா இன்று சி.பி.சி.ஐ.டி போலீசார் முன்பு ஆஜராகி வாக்குமூலம் அளித்துள்ளார். அப்போது அவர், வழக்குகள் தொடர்பாக ஆலோசனை பெறுவதற்கான தன்னிடம் விஷ்ணு பிரியா பேசியதாக கூறியுள்ளார்.
மாளவியா கன்னியாகுமரி மாவட்டம் நாகர் கோவிலை சேர்ந்தவர். மதுரை உயர்நீதிமன்றக் கிளையில் வழக்கறிஞராக இருந்து வருகிறார். அரசு வழக்கறிஞரிடம் உதவியாளராகவும் இருந்து வருகிறார். தற்கொலை செய்து கொண்ட டி.எஸ்.பி. விஷ்ணு பிரியா திருப்பத்தூரில் பணியாற்றிய போது வழக்குகள் தொடர்பாக சட்ட சந்தேகங்களை மாளவியாவிடம் கேட்டு தெரிந்து கொண்டார். பின்னர் திருச்செங்கோட்டுக்கு மாற்றப்பட்டார். இங்கு அவர் வந்ததும் கோகுல்ராஜ் கொலை வழக்கை விசாரித்தார். இந்த கொலை வழக்கு குறித்தும், கொலையாளிகளை கைது செய்வது குறித்தும் சட்ட நுணுக்கங்களை கேட்டு தெரிந்து கொண்டார். இதுதவிர தனக்கு ஏற்பட்ட நெருக்கடிகள் குறித்தும் கூறி உள்ளார். இந்த விவரங்களை சி.பி.சி.ஐ.டி.போலீசாரிடம் மாளவியா கூறியுள்ளார்.
சிபிசிஐடி போலீசாரால் கைப்பற்றப்பட்ட விஷ்ணுபிரியாவின் லேப்டாப், டைரி, மொபைல்போதன் உள்ளிட்டவைகளை, சிபிசிஐடி போலீசார், நாமக்கல் குற்றவியல் முதலாவது நடுவர் நீதிமன்றத்தில் இன்று சமர்ப்பித்துள்ளனர்.











Click it and Unblock the Notifications