ஊழல் வழக்கு: அன்புமணி ராமதாஸ் மீது குற்றச்சாட்டுகளைப் பதிவு செய்வது டிச.10-க்கு ஒத்திவைப்பு
டெல்லி: மருத்துவ கல்லூரிகளுக்கு முறைகேடாக அனுமதி வழங்கிய வழக்கில் முன்னாள் மத்திய அமைச்சரும் பா.ம.க.வின் முதல்வர் வேட்பாளருமான அன்புமணி ராமதாஸ் மீதான குற்றச்சாட்டுகளை பதிவு செய்வது டிசம்பர் 10-ந் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
மத்தியில் காங்கிரஸ் கூட்டணி அரசில் சுகாதாரத்துறை அமைச்சராக அன்புமணி ராமதாஸ் பதவி வகித்த போது இந்தூர், லக்னோவில் மருத்துவக் கல்லூரிகளுக்கு முறைகேடாக அனுமதி வழங்கப்பட்டதாக புகார் எழுந்தது.

இது தொடர்பாக சி.பி.ஐ. விசாரணை நடத்தி அன்புமணி ராமதாஸ் உட்பட 10 பேர் மீது வழக்குப்பதிவு செய்தது. இந்த வழக்கு விசாரணை டெல்லி சி.பி.ஐ. சிறப்பு நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது. இவ்வழக்கில் அன்புமணி உள்ளிட்டோர் மீது குற்றச்சாட்டுகளை பதிவு செய்யலாம் எனவும் சி.பி.ஐ. நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது.
அன்புமணி உள்ளிட்ட 10 பேர் மீதும் இன்று குற்றச்சாட்டுகள் பதிவு செய்வதாக இருந்தது. ஆனால் சி.பி.ஐ. நீதிமன்றத்தின் வழக்கு விசாரணைக்கு தடைவிதிக்க கோரி உச்சநீதிமன்றத்தில் அன்புமணி மனு ஒன்றைத் தாக்கல் செய்தார்.
இம்மனு மீது வரும் 6-ந்தேதி விசாரணை நடைபெற உள்ளது. இதை இன்றைய விசாரணையின் போது சி.பி.ஐ. நீதிமன்றத்தில் அன்புமணி வழக்கறிஞர்கள் சுட்டிக்காட்டினர்.
இதனைத் தொடர்ந்து அன்புமணி மீதான குற்றச்சாட்டுகளைப் பதிவு செய்வது வரும் 10-ந் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது.












Click it and Unblock the Notifications