ஸ்டார் ஹோட்டலில் தண்ணியை போட்டு தகராறு செய்த கருணாஸ் நண்பர்கள் - கொலை முயற்சி வழக்கு
எம்எல்ஏ கருணாசின் நண்பர்கள் குடிபோதையில் அடிதடி தகராறில் ஈடுபட்ட சிசிடிவி காட்சி வெளியாகியுள்ளது.
Recommended Video
சென்னை: சென்னை எம்ஆர்சி நகரில் உள்ள நட்சத்திர ஹோட்டல் பாரில் எம்.எல்.ஏ.வும்., நடிகருமான கருணாஸ் நண்பர்கள் தொழிலதிபர் ஒருவருடன் அடிதடி தகராறில் ஈடுபட்டு அவரை சரமாரியாக தாக்கும் வீடியோ காட்சிகள் வெளியாகியுள்ளன.
தொழில் அதிபர் மீது தாக்குதல் நடத்திய கருணாசின் ஆதரவாளரை போலீசார் வழக்குப் பதிவு செய்து கைது செய்துள்ளனர். அவர்கள் மீது கொலை முயற்சி வழக்கு போடப்பட்டுள்ளன.
சென்னை எம்.ஆர்.சி. நகரில் சாமர்செட் ஸ்டார் ஹோட்டல் உள்ளது. இங்கு உள்ள பாருக்கு மிகபிரபலமானவர்களும், தொழிலதிபர்களும் வருவது வாடிக்கை. கடந்த சனிக்கிழமை கருணாஸ் மற்றும் அவரது கட்சி நிர்வாகியான டிஃபெண்டர் தாமோதர கிருஷ்ணன் உள்ளிட்டோர் சென்றிருந்தனர்.
கருணாஸ் நண்பர்கள்
கருணாஸ் தனது நண்பர்களுடன் மது அருந்திக் கொண்டிருந்த போது அங்கு வந்து தொழிலதிபரான பரணீஸ்வரன் என்பவர் அறிமுகமானதாகக் கூறப்படுகிறது. அப்போது அங்கிருந்த கருணாசின் நண்பர் அஜய் என்பவருக்கும் பரணீஸ்வருக்கும் வாய் தகராறு ஏற்பட்டுள்ளது.
நண்பர்கள் அடிதடி
வாக்குவாதம் முற்றிய நிலையில் மதுபோதையில் சிலர் பரணீஸ்வரனை சரமாரியாக தாக்கும் சி.சி.டி.வி. காட்சிகள் வெளியாகியுள்ளன. அப்போது கருணாஸ் தடுக்க முயற்சி செய்கிறார். தகராறில் கருணாஸ் கீழே விழவே அவரை சிலர் தூக்கி விடுகின்றனர்.
கருணாஸ் நண்பர்கள் மீது வழக்கு
தாக்குதலால் நிலைகுலைந்த பரணீஸ்வரனுக்கு முகம், தோள்பட்டை உள்ளிட்ட இடங்களில் காயம் ஏற்பட்டது. அவர் அளித்த புகாரின் பேரில் கருணாசின் நண்பர்கள் 6 பேர் மீது போலீசார் கொலை முயற்சி உள்ளிட்ட 5 பிரிவுகளில் வழக்கு பதிவு செய்துள்ளனர்.
அஜய் மீது வழக்கு
தொழில் அதிபர் பரணீஸ்வரனை முதலில் தாக்கி, தகராறை துவக்கி வைத்த நபர் மீது வழக்கு பதிவு செய்த போலீசார் அவரை கைது செய்யவில்லை என்கிற புகார் எழுந்துள்ளது. அஜய் என்பவர் மீது கொலை முயற்சி உள்ளிட்ட வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.
சிசிடிவியில் சிக்கிய கருணாஸ்
தகராறின் போது கருணாஸ் சம்பவ இடத்தில் இல்லை என்றும் அதனால் அவர் மீது நடவடிக்கை எடுக்கப்படவில்லை என்றும் போலீசார் கூறி வந்த நிலையில் தற்போது வெளியாகியுள்ள சி.சி.சி.டி.வி. காட்சிகள் அங்கு கருணாஸ் இருந்ததை உறுதிப்படுத்தியுள்ளன. எம்எல்ஏ ஒருவரே மதுபான விடுதியில் குடித்து விட்டு கூத்தடித்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
வார இறுதி நாட்கள்
சென்னையில் வார இறுதி நாட்களில் பிரபல மதுபான விடுதிகளில் நள்ளிரவு வரை குடித்து விட்டு ஆட்டம் போடுகின்றனர். அதே போதையோடு காரை ஓட்டி வந்து அப்பாவி மக்களின் உயிருக்கு எமனாகின்றனர். நள்ளிரவு மதுபான விடுதிகளில் மக்கள் பிரதிநிதிகளே ஆட்டம் போடும் சிசிடிவி காட்சிகள் தற்போது வெளியாகியுள்ளது.