சட்டசபை தேர்தல்: தலைமை தேர்தல் ஆணையர் நஜீம் ஜைதி சென்னை வருகை
சென்னை: தமிழகம், புதுவை சட்டசபை தேர்தல் ஏற்பாடுகள் தொடர்பாக ஆலோசனை நடத்த தலைமைத் தேர்தல் ஆணையர் நஜீம் ஜைதி சென்னை வருகை தந்துள்ளார். புதுச்சேரியில் இன்று நடைபெறும் தேர்தல் ஏற்பாடு தொடர்பான கூட்டத்தில் நஜீம் ஜைதி பங்கேற்கிறார்.
தமிழகத்துடன் புதுச்சேரி, கேரளா, மேற்கு வங்கம் மற்றும் அஸ்ஸாம் மாநில சட்டசபைகளுக்கான தேர்தல்களும் நடைபெற உள்ளது. இந்த மாநிலங்களில் சட்டசபை தேர்தல் ஏற்பாடுகள் முழு அளவில் நடைபெற்று வருகின்றன.
தமிழக சட்டசபைக்கு மே 2-வது வாரத்தில் தேர்தல் நடைபெறக் கூடும் என கூறப்படுகிறது. இதற்கான அதிகாரப்பூர்வமான அறிவிப்பு மார்ச் முதல் வாரத்தில் வெளியிடப்படலாம் எனவும் டெல்லி தகவல்கள் தெரிவிக்கின்றன.
இந்நிலையில் சட்டசபை தேர்தல் ஏற்பாடுகள் குறித்து ஆலோசனை நடத்த தலைமைத் தேர்தல் ஆணையர் நஜீம் ஜைதி இன்று சென்னை வருகை தந்துள்ளார். அவருடன் தேர்தல் ஆணையாளர்கள் ஜோதி, ஓம்பிரகாஷ் ராவத் மற்றும் இணை தேர்தல் ஆணையர் சந்தீப் ஆகியோரும் சென்னை வருகை தந்துள்ளனர்.
புதுச்சேரியில் இன்று மாலை நடைபெறும் ஆலோசனைக் கூட்டத்தில் நஜீம் ஜைதி குழுவினர் பங்கேற்கின்றனர். சென்னையில் நாளை தேர்தல் ஏற்பாடு குறித்த ஆலோசனை கூட்டத்தில் நஜீத் ஜைதி தலைமையிலான குழு பங்கேற்கிறது.