வெள்ள நிவாரணத்துக்கு மத்திய அரசு வழங்கியுள்ள ரூ.939 கோடி போதுமானது இல்லை: தமிழருவி மணியன்
சென்னை: தமிழகத்தில் வெள்ளம் பாதித்துள்ள பகுதிகளுக்கு நிவாரண உதவியாக மத்திய அரசு வழங்கியுள்ள ரூ.939 கோடி போதுமானது இல்லை என காந்திய மக்கள் இயக்கத்தின் நிறுவனர் தமிழருவி மணியன் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக நேற்று அவர் வெளியிட்ட அறிக்கை:
தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் குறிப்பாக கடலூர், காஞ்சிபுரம், தூத்துக்குடி, சென்னை மாவட்டங்களில் கடும் மழையினால் பெருமளவு சேதங்கள் ஏற்பட்டுள்ளன. இந்த வெள்ளச் சேதங்களில் இருந்து பாதிக்கப்பட்ட மக்களை விடுவிப்பதற்கும், அதற்கு உரிய நிவாரணங்களை வழங்குவதற்கும் அரசு தாமதமாகச் செயல்பட்டாலும், அது தொடர்பாக விமர்சனங்களை வைப்பதில் எந்த நன்மையும் வாய்க்கப் போவதில்லை.

இயற்கைப் பேரிடர் தந்திருக்கும் மோசமான இன்னல்களிலிருந்து தமிழகத்தை விடுவிப்பதற்கு மத்திய அரசு தற்போது முதல்கட்டமாக வழங்கியிருக்கும் ரூ.939 கோடி எந்த வகையிலும் போதுமானது இல்லை. மத்திய அரசின் நிபுணர்குழு மிக விரைவாக வந்து, வெள்ளச் சேதங்களைப் பார்வையிட்டு அறிக்கை வழங்க வேண்டும். தமிழக அரசு எதிர்பார்ப்பதுபோல் குறைந்தது ரூ.8 ஆயிரம் கோடியாவது எவ்வித தயக்கமுமின்றி மத்திய அரசு உடனடியாக வழங்க வேண்டும்.
வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு மத்திய அரசின் நிதி முறையாகச் சென்று சேர்வதுதான் முக்கியம். அதற்கு பாதிக்கப்பட்ட ஒவ்வொரு பகுதியிலும் அரசியல் சார்பற்ற நேர்மையான சமூக ஆர்வலர்கள் கொண்ட குழுக்கள் அமைக்கப்பட்டு, அவற்றின் கண்காணிப்பின் கீழ் நிவாரணப் பணிகளும், நிதி உதவியும் வழங்க வேண்டும் என்று தமிழருவி மணியன் கூறியுள்ளார்.












Click it and Unblock the Notifications