தமிழக ரயில்வே திட்டங்களை ரத்து செய்ய மத்திய அரசு முயற்சி... 'கொளுத்தி போடும்' இளங்கோவன்
சென்னை: தமிழக ரயில்வே திட்டங்களை ரத்து செய்ய மத்திய அரசு முயலுவதாக தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் கூறினார்.
இதுகுறித்து, தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:
தமிழகத்தில் நிறைவேறாத நிலையில் உள்ள 22 ரயில் திட்டங்களுக்கு உரிய நிதி ஒதுக்கப்படாத காரணத்தால் முடக்கப்பட்டுள்ளன. தமிழகத்தில் ரூ.19 ஆயிரத்து 500 கோடி செலவில் செயல்படுத்த திட்டமிடப்பட்டிருந்த 14 ரயில் திட்டங்கள் உள்பட மொத்தம் 160 திட்டங்களை ரத்து செய்ய மத்திய ரயில்வே துறை திட்டமிட்டுள்ளது என்கிற செய்தி மிகுந்த அதிர்ச்சியைத் தருகிறது.

ஏற்கனவே, தமிழக ரயில் திட்டங்கள் முடக்கப்பட்ட நிலையில், திட்டங்களையே ஒட்டு மொத்தமாக ரத்து செய்ய முயல்வது மத்திய பாஜக அரசின் தமிழக விரோத போக்கையே வெளிப்படுத்துகிறது. இத்தகைய அவலநிலைக்கு முக்கிய காரணம் மத்திய - மாநில அரசுகளிடையே நிலவி வருகிற இணக்கமற்ற செயல்பாடுகளே ஆகும்.
கடந்த சில ஆண்டுகளில் கர்நாடகம், கேரளா போன்ற மாநிலங்கள் தங்களுக்கு முன்னுரிமை உள்ள திட்டங்களை நிறைவேற்ற மத்திய ரயில்வே அமைச்சகத்துடன் விரிவான ஆலோசனை செய்து செயல் திட்டங்களை வகுத்து நிறைவேற்ற நடவடிக்கை எடுத்து வருகிறது.
மத்திய அரசு ஒதுக்கிய நிதியுடன் மாநில அரசே ஒரு பகுதி நிதியை ஒதுக்கி, சாதகமாக்கி வெற்றிகரமாக திட்டங்களை செயல்படுத்தி வருகின்றன.
இந்த நிலையில், தமிழகத்தில் இருந்து கடந்த தேர்தலில் அ.தி.மு.க. சார்பாக 37 நாடாளுமன்ற உறுப்பினர்கள் வெற்றி பெற்றுள்ளனர். இவர்கள் தமிழகத்தின் வளர்ச்சிக்காக என்ன செய்கிறார்கள். நிதி அமைச்சரை சந்தித்தார்களா?, ரயில்வே அமைச்சரை சந்தித்தார்களா?
சென்னை மாநகரில் மக்கள் நெரிசலை பெருமளவில் குறைக்கும் மெட்ரோ ரயில் திட்டத்திற்காக கடந்த மத்திய காங்கிரஸ் கூட்டணி அரசு ரூ.14 ஆயிரத்து 400 கோடி மதிப்பீட்டில் செயல்படுத்த வழிவகுத்தது. அத்திட்டத்தின் ஒரு பகுதியாக தற்போது கோயம்பேடு - ஆலந்தூர் மெட்ரோ ரெயில் பாதை தொடங்குவதற்கு தயாராக உள்ளது.
ஆனால், தமிழக அரசோ மெட்ரோ ரயில் தொடக்க விழாவுக்கு நாள் நிர்ணயிக்காமல் காலம் தாழ்த்தி வருகிறது. முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவை கொண்டு தொடக்க விழாவை நடத்தலாம் என முதல்வர் நினைக்கிறார் என்று கூறப்படுகிறது. செயல்படாத முடங்கிய அவல நிலையில் இருக்கும் தமிழகத்தை அ.தி.மு.க.விடம் இருந்து விடுவிக்க வேண்டிய பொறுப்பு அனைத்து அரசியல் கட்சிகளுக்கும் இருக்கிறது.
இவ்வாறு ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் கூறியுள்ளார்.












Click it and Unblock the Notifications