மீண்டும் வருகிறது ஜல்லிக்கட்டு! தடை விலங்குகள் பட்டியலில் இருந்து நீக்க மத்திய அரசு முடிவு!!
கும்பகோணம் : தமிழகத்தில் ஜல்லிக்கட்டு நடத்துவதற்கான ஏற்பாடுகளை மத்திய அரசு மேற்கொள்ளும் என்று மத்திய சுற்றுச் சூழல் மற்றும் வனத்துறை அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் தெரிவித்துள்ளார்.
பா.ஜ.க.வின் மாநில செயற்குழு கூட்டம் 2 வது நாளாக கும்பகோணம்-தஞ்சை சாலையில் உள்ள ரிசார்ட்ஸில் புதன்கிழமை நடைபெற்றது.
இக்கூட்டத்தில் மத்திய அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர், கப்பல் மற்றும் நெடுஞ்சாலைத்துறை இணை அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன், பா.ஜ.க. மாநில தலைவர் தமிழிசை செளந்தரராஜன், தேசிய செயற்குழு உறுப்பினர் இல.கணேசன், முன்னாள் மாநில தலைவர்கள் லட்சுமணன், மற்றும் சி.பி.ராதாகிருஷ்ணன், வானதி சீனிவாசன் உள்ளிட்ட 250 க்கும் மேற்பட்ட செயற்குழு உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.
அப்போது செய்தியாளர்களிடம் பேசிய மத்திய சுற்றுச்சூழல் மற்றும் வனத்துறை அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் முந்தைய காங்கிரஸ் ஆட்சியில் ஜல்லிக்கட்டு தடை செய்யப்பட்டதாகவும், அதில் சட்டரீதியிலான பிரச்சனை உள்ளதால் சில மறு சீரமைப்புகள் செய்ய வேண்டி வரும் என்றும் குறிப்பிட்டார்.
உச்சநீதிமன்றம் ஜல்லிக்கட்டு நடத்த புதிய விதிமுறைகளை வகுத்துள்ளதாகவும், அதன்படி ஜல்லிக்கட்டு நடத்துவதற்கான ஏற்பாடுகளை மத்திய அரசு மேற்கொள்ளும் என்றும் பிரகாஷ் ஜவ்டேகர் குறப்பிட்டார்.
தடை செய்யப்பட்ட விலங்குகள் பட்டியலில் இருந்து காளைகளை நீக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் அவர் கூறினார் .
இதன் மூலம் தமிழகத்தில் மீண்டும் ஜல்லிக்கட்டு நடத்தப்பட வாய்ப்பு எழுந்துள்ளது.