ஊழலிலும், மதுவிலும் மூழ்கிப் போன தமிழ்நாடு... தமிழக அரசை வறுத்தெடுத்த மத்திய அமைச்சர் கோயல்
திருவள்ளூர்: தமிழகம் ஊழல் மற்றும் மதுவில் மூழ்கி கிடக்கிறது என்றும், நெருக்கடியில் இருப்பதால் அதனால் சுயமாக முடிவு எடுக்க முடியவில்லை என்றும் தமிழக அரசை கடுமையாக விமர்சித்துள்ளார் மத்திய மின்துறை அமைச்சர் பியூஷ் கோயல்.
சென்னையை அடுத்த திருவள்ளூரில் நடந்த தமிழ்ப் புத்தாண்டு நிகழ்ச்சியில் கலந்து கொண்டார் மத்திய அமைச்சர் பியூஷ் கோயல். அப்போது அவர் பேசியதாவது:-
'தமிழகத்தில் ஊழல் மலிந்து விட்டது. தமிழகம் ஊழல் மற்றும் மதுவில் மூழ்கிய மாநிலமாக மாறி விட்டது. தமிழக அரசு நெருக்கடியில் இருப்பதால் அதனால் தன்னிச்சையாக எந்த முடிவையும் எடுக்க முடியவில்லை. மது, ஊழலால் தமிழகத்தின் வளர்ச்சி பாதிக்கப்பட்டுள்ளது.

இது நேர்மையான அரசாக இருந்தால் தமிழகத்தில் 24 மணி நேர மின்சாரம் வழங்கட்டும். தமிழகத்தில் நிலவும் மின் பற்றாக்குறையை மனதில் கொண்டு தான் பிரதமர் மோடி, தமிழகம் உள்ளிட்ட தென்னிந்திய மாநிலங்களுக்கு 6000 மெகா வாட்ஸ் மின்சாரம் கிடைக்கும் வகையில் ரூ.3000 கோடி முதலீட்டு மின் திட்டங்களை வகுத்துள்ளார்.
இது தொடர்பாக கடந்த முறை நான் தமிழகம் வந்த போது தமிழக மின்துறை அமைச்சரிடம் பேசினேன். தமிழகத்திற்கு 6000 மெகாவாட் மின்சாரத்தை வழங்க மத்திய அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது. இதற்காக, ஏப்ரல் அல்லது மே மாதத்தில் மத்திய அதிகாரிகள் குழு தமிழகம் வர உள்ளது.
இந்தியாவிற்கு யுரேனியம் தர கனடா ஒப்பதல் தெரிவித்திருப்பது வரவேற்கத்தக்கது. இதனால் மின் தேவைக்கு எதிராக போராட்டத்தை நம்மால் சமாளிக்க முடியும். இட ஒதுக்கீட்டிற்கு நாங்கள் முழு ஆதரவு தருகிறோம். நாட்டின் முன்னேற்றத்திற்காகவும், வளர்ச்சிக்காகவும் இடைவிடாது உழைத்து வருகிறோம். ஆனால் காங்கிரஸ் துணைத் தலைவர் ராகுல் 57 நாட்கள் ஓய்விற்கு சென்று விட்டு வந்துள்ளார்.
ஜனதா பரிவார் பற்றி பிரதமர் மோடி போல் கூறவேண்டும் என்றால் 0+0=0. இது தான் ஜனதா பரிவாரால் நடக்கப் போவது. இனி வரும் காலங்களில் இன்னும் அதிக அளவிலான மத்திய அமைச்சர்கள் தமிழகத்திற்கு வந்து, மக்களை சந்தித்து பேச உள்ளனர்' என இவ்வாறு அவர் தெரிவித்தார்.












Click it and Unblock the Notifications