மத்தியில் அதிமுக அங்கம் வகிக்கும் ஆட்சியால்தான் தமிழக நலன், தமிழர் உரிமைக்கு பாதுகாப்பு: ஜெ.
காஞ்சிபுரம்: மத்தியில் அதிமுக அங்கம் வகிக்கும் ஆட்சி அமைந்தால்மட்டுமே தமிழக நலன் மற்றும் தமிழர் உரிமைகள் பாதுகாக்கப்படும் என்று அதிமுக பொதுச்செயலரும் தமிழக முதல்வருமான ஜெயலலிதா தெரிவித்துள்ளார்.
லோக்சபா தேர்தலுக்கான தேர்தல் பிரசாரத்தை இன்று காஞ்சிபுரத்தில் தொடங்கினார் ஜெயலலிதா. காஞ்சிபுரம் தொகுதி அதிமுக வேட்பாளர் மரகதம் குமாரவேலுக்கு வாக்கு சேகரித்து ஜெயலலிதா பேசியதாவது:
மத்தியில் காங்கிரஸ் மக்கள் விரோத ஆட்சியை அகற்றி மக்களாட்சியை மலர வைக்க வேண்டும். 1947ஆம் ஆண்டுக்கு முன்பு நாட்டு மக்கள் எப்படியான மனநிலையில் இருந்தார்களோ அந்த மனநிலை இப்போது இருக்கிறது.
கடந்த 10 ஆண்டுகளில் இந்தியாவை வேட்டைக்காடாக்கி கொள்ளையடித்து, சூறையாடிவிட்டது காங்கிரஸ். இப்படி நாட்டை சூறையாடிய காங்கிரஸ் அரசை தூக்கியெறிய வேண்டும்.
எனக்கு நன்றாக தெரியும்.. எதிர்காலத்தில் மத்தியில் காங்கிரஸ் ஆட்சியை அமையவிடக் கூடாது என்ற மனநிலையில் நீங்கள் எல்லாம் இருக்கிறீர்கள். வரப்போகும் தேர்தல் மக்கள் விரோத காங்கிரஸ் மத்திய ஆட்சியை முடிவுக்கு கொண்டு வந்து மக்களாட்சியை நிலைநாட்டும் தேர்தல்.
மக்களாட்சி மலர வேண்டும்..
மத்தியில் நடைபெறும் குடும்ப, ஊழல் ஆட்சிக்கு முற்றுப்புள்ளி வைத்து மக்களாட்சி மலர வைக்கக் கூடிய தேர்தலாக அமைய வேண்டும். மத்தியில் அமைவது நமது ஆட்சியாக, அதிமுக அங்கம் வகிக்கும் ஆட்சியாக அமைய வேண்டும்.
அப்போதுதான் தமிழகத்தின் நலன்கள், தமிழர் உரிமைகள் பாதுகாக்கப்படும். தமிழகத்தில் 81 லட்சம் குடும்ப அட்டைதாரர்கள் விலையில்லா பொருட்கள் வழங்கப்பட்டுள்ளன.
34, 687 பயனாளிகளுக்கு கறவை பசுக்களும் 4 லட்சம் பேருக்கு 16 லட்சம் வெள்ளாடுகளும் வழங்கினோம். இதேபோல் எண்ணற்ற நலத்திட்டங்களை செய்து கொண்டிருக்கிறோம்.
தமிழக மீனவர்களை துன்புறுத்துதல், சிறைபிடிப்பதை வாடிக்கையாக கொண்டிருக்கிறது இலங்கை அரசு. இலங்கை அரசால் சிறைபிடிக்கப்பட்டோர் எனது அரசின் முயற்சிளால் விடுவிக்கப்பட்டு வருகின்றனர்.
இலங்கை அரசின் அராஜகத்துக்கு முற்றுப்புள்ளி வைக்க மத்தியில் ஆட்சி மாற்றம் அவசியம். மத்தியில் மாற்றத்தை ஏற்படுத்துவீர்கள் என்ற நம்பிக்கை எனக்கு உள்ளது.
மத்திய அரசின் தவறான கொள்கைகளால் விலைவாசி விஷம்போல் ஏறிவருகிறது. தமிழக அரசை காங்கிரஸ் கூட்டணி அரசு மாற்றாந்தாய் மனப்பான்மையோடு நடத்துகிறது. இதற்கு உடந்தையாக இருக்கிறது திமுக.
எத்தனை எத்தனை துரோகங்கள்...
தமிழகத்துக்கும் தமிழர்களுக்கும் மத்திய காங்கிரஸ் அரசு துரோகம் இழைக்கிறது. இலங்கைக்கு ஆயுதங்களை கொடுத்து பயிற்சிகளைக் கொடுத்து ஈழத் தமிழர்கள் அழியக் காரணமாக இருந்தது காங்கிரஸ். இது முதல் துரோகம். ஈழ இனப்படுகொலை செய்தவர்களை தண்டிக்க வேண்டும், தமிழீழ பொதுவாக்கெடுப்பு நடத்த வேண்டும் என்று தீர்மானம் நிறைவேற்றினோம். தமிழக அரசின் ஈழம் தொடர்பான தீர்மானங்கள் மீது ஒரு நடவடிக்கையும் எடுக்கவில்லை.
இலங்கைக்கு சாதகமாகத்தான் மத்திய அரசு நடந்து கொள்கிறது. இது மத்திய அரசின் தமிழகத்துக்கான இரண்டாவது வது துரோகம். தமிழக மீனவர் பிரச்சனைக்கு மத்திய தீர்வு காணதது 3வது துரோகம்.
கச்சத்தீவு பிரச்சனையில் தமிழக அரசுக்கு எதிராக மனுத்தாக்கல் செய்தது அரசு காங்கிரஸ் அரசின் 4வது துரோகம். மண்ணெண்ணெய் ஒதுக்கீட்டு அளவைக் குறைத்தது 5வது துரோகம்
இப்படி எண்ணற்ற துரோகங்களை மத்திய காங்கிரஸ் கூட்டணி அரசு மேற்கொண்டு வருகிறது. மாநில அரசுகளின் உரிமைகளை பறிக்கிறது மத்திய காங்கிரஸ் கூட்டணி அரசு.
சில்லறை வர்த்தகத்தில் அன்னிய முதலீட்டுக்கு காரணமானதுதான் மத்திய அரசு. நாட்டின் பணவீக்க விகித வீழ்ச்சிக்கு, சமையல் எரிவாயு சிலிண்டர்கள் எண்ணிக்கை குறைப்புக்கு காரணமானது மத்திய காங்கிரஸ் அரசு.
உரவிலை உயர காரணமாக இருந்தது காங்கிரஸ் அரசு. இந்த காங்கிரஸ் கட்சிக்கு வரும் தேர்தலில் பாடம் புகட்டுவீர்களா? காங்கிரஸுக்கு உடந்தையாக இருந்த திமுகவுக்கு பாடம் புகட்டுவீர்களா?
காங்கிரஸ் கட்சிக்கும் உடந்தையாக இருந்த திமுகவுக்கும் பாடம் புகட்ட நல்ல வாய்ப்புதான் வரும் தேர்தல். வரப்போகும் தேர்தல் அண்டை நாட்டு அச்சுறுத்தல்களில் இருந்து இந்தியாவை காப்பாற்றும் தேர்தல்.
நாட்டின் பாதுகாப்பு, பொருளாதார நலன்கள்
நாட்டின் ராணுவத்தை நவீனமயமாக்க புதிய தளவாடங்களை வாங்குவதற்கான நிதி ஒதுக்கீடு என்பது மிகக் குறைவு. வெளிநாட்டு நிறுவனங்களுடன் ஒப்பந்தம் செய்யாமல் அந்தந்த நாட்டு அரசுகளுடன் பாதுகாப்பு துறையில் ஒப்பந்தம் மேற்கொண்டால் ஊழலை ஒழிக்க முடியும்.
முப்படையில் பணிபுரிவோரின் தேவையில் காங்கிரஸ் மத்திய அரசு அக்கறை செலுத்தவில்லை. மத்தியில் அதிமுக அங்கம் வகிக்கும் ஆட்சி அமைந்தால் அண்டை நாட்டு சவால்களை சமாளிக்க நவீன ஆயுதங்கள் வாங்கப்படும்.
வல்லரசு நாடுகளுக்கு இணையான இந்தியாவின் பாதுகாப்பு துறையை வலுப்படுத்துவோம். மத்திய அரசின் தவறான பொருளாதார கொள்கையை மாற்றியமைப்போம்.
இறக்குமதி, ஏற்றுமதி அடிப்படையில் பெட்ரோல், டீசல் விலை நிர்ணயிக்கப்படுகிறது. இந்த விலை நிர்ணய கொள்கையை மாற்றியமைப்போம். உரத்தைக் கூட வெளிநாட்டில் இருந்து இறக்குமதி செய்கிறது மத்திய அரசு.
மொரீஷியஸ் வழி முதலீடுகளால் இந்திய ரூபாயின் மதிப்பு வீழ்ச்சி அடைகிறது. காங்கிரஸ் மத்திய அரசால் இந்தியாவின் பொருளாதாரமே சின்னா பின்னமாக்கப்பட்டுவிட்டது. அதன் சுமை ஏழைகள் மீது சுமத்தப்பட்டுள்ளது.
எங்கும் ஊழல்- எதிலும் ஊழல் என்பதாகத்தான் காங்கிரஸ் மத்திய அரசின் நடவடிக்கைகள் இருக்கிறது. 17 ஆண்டுகாலம் மத்திய அமைச்சரவையில் திமுக அங்கம் வகித்தும் தமிழகத்துக்கு ஒரு பயனும் இல்லை.
தமிழ் மொழியை ஆட்சி மொழியாக்குவோம். சென்னை உயர்நீதிமன்றத்தில் தமிழே வழக்காடு மொழியாக்குவோம். அமைதி, வளம், வளர்ச்சி பாதையில் இந்தியாவை வழிநடத்தி செல்ல வாய்ப்பு தருவீர்கள் என்று நம்புகிறோம்.
காஞ்சிபுரம் அதிமுக வேட்பாளர் மரகதம் குமாரவேலுக்கு இரட்டை இலை சின்னத்தில் வாக்களிக்க வேண்டும். அச்சம் என்பது மடமையடா! அஞ்சாமை திராவிடர் உடமையடா! ஆறிலும் சாவு- நூறிலும் சாவு.. தாயகம் காப்பது நமது கடமையடா! என்ற எம்.ஜி.ஆரின் பாடலை நினைவில் கொண்டு இரட்டை இலைக்கு வாக்களிக்க வேண்டும்.
இவ்வாறு ஜெயலலிதா பேசினார்.