கருணாநிதிக்கு பாரத ரத்னா விருது.. பரிசீலனை செய்ய குழு அமைத்தது மத்திய அரசு!
சென்னை: திமுக தலைவர் கருணாநிதிக்கு பாரத ரத்னா வழங்குவது பற்றி பரிசீலனை செய்ய மத்திய அரசு ஒரு குழுவை அமைத்துள்ளது என்று பாஜகவை சேர்ந்த, ராஜ்யசபா எம்.பி இல.கணேசன் தெரிவித்தார்.
திமுக தலைவரும், தமிழகத்தில் 5 முறை முதல்வராக பதவி வகித்தவருமான கருணாநிதி, கடந்த 7ம் தேதி காலமானார். கருணாநிதி அரசியல், இலக்கியம், மொழி, பத்திரிகை என பல தளங்களிலும் முத்திரை பதித்தவர் என்பதால், பாரத ரத்னா விருது வழங்க வேண்டும் என்ற கோரிக்கைகள் வலுத்து வருகின்றன.

கருணாநிதிக்கு பாரத ரத்னா வழங்க வேண்டும் என்று, ராஜ்யசபாவில் நேற்று, திமுக எம்.பி. திருச்சி சிவா பேசியிருந்தார். விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவனும் இதே கோரிக்கையை வலியுறுத்தியிருந்தார்.
இன்று, மதிமுக பொதுச் செயலாளர் வைகோ வெளியிட்ட அறிக்கையிலும், இந்திய நாட்டில் தென்னகத்து ஒளிவிளக்காக ஏழு கோடி தமிழர்களின் நெஞ்சில் மட்டுமல்ல, மாநில எல்லைகளைக் கடந்து நாட்டு மக்கள் அனைவரது பேரன்புக்கும், போற்றுதலுக்கும் உரிய தமிழகர்களின் சகாப்த நாயகர் தலைவர் கருணாநிதிக்கு இந்திய அரசு பாரத ரத்னா விருது வழங்கிச் சிறப்பிக்க வேண்டும், என்று கோரிக்கைவிடுத்திருந்தார்.
இதுகுறித்து இல.கணேசனிடம் நிருபர்கள் இன்று கேள்வி எழுப்பியபோது, கருணாநிதிக்கு பாரத ரத்னா வழங்குவது பற்றி பரிசீலனை செய்ய மத்திய அரசு ஒரு குழுவை அமைத்துள்ளது என்றும், கருணாநிதிக்கு பாரத ரத்னா வழங்குவது பற்றி மத்திய அரசுதான் முடிவு செய்யும் என்றும் இல.கணேசன் தெரிவித்தார்.












Click it and Unblock the Notifications