தமிழக மீனவர் பிரச்சனைக்கு 'அம்மா' - 'மேடம்' மோதல்தான் காரணம்: மோடி தாக்கு
கன்னியாகுமரி: தமிழக மீனவர்கள் பிரச்னைக்கு தமிழக முதல்வர் ஜெயலலிதா, காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி ஆகியோர் இடையேயான மோதலே காரணம் என்று பாரதிய ஜனதா கட்சியின் பிரதமர் பதவி வேட்பாளர் நரேந்திர மோடி குற்றம்சாட்டியுள்ளார்.
கன்னியாகுமரியில் நேற்று நடைபெற்ற தேர்தல் பிரசார பொதுக்கூட்டத்தில் மோடி பேசியதாவது:
இந்தத் தேர்தல் அரசியல் கட்சிகளுக்கும், வேட்பாளர்களுக்கும் இடையே நடக்கும் போட்டியல்ல. இது மக்கள் சேர்ந்து நடத்தும் ஒரு போராட்டம். காங்கிரஸ் கட்சி தான் செய்த தவறுகளுக்கான பலனை அனுபவித்தாக வேண்டும்.

அதிமுக, திமுக ஆகிய இரு கட்சிகளிடம் இருந்தும் மக்கள் விடுபடாவிட்டால் தமிழகத்துக்கு விமோசனம் கிடையாது. இரு கட்சிகளும் ஒன்றை ஒன்று அழிப்பதிலேயே காலத்தை கழிக்கின்றன. மக்களைப் பற்றி சிந்திக்க அவர்களுக்கு நேரம் இல்லை.
தமிழகத்துக்கு இப்போது ஒரு மாறுதல் தேவைப்படுகிறது. இந்தத் தேர்தலில் தேசிய ஜனநாயக கூட்டணியில் தேமுதிக, பாமக, மதிமுக ஆகிய கட்சிகளுடன் பாஜக வலுவான கூட்டணியை அமைத்துள்ளது.
மத்தியில் வலிமையான அரசு அமைய தமிழக மக்களாகிய உங்களின் வலிமையான கரங்கள் தேவை. எனவே தமிழக மக்களின் நலனை கருத்தில்கொண்டு இந்தக் கூட்டணிக்கு அனைவரும் வாக்களிக்க முன்வர வேண்டும்.
இதே மைதானத்தில் பேசிய சோனியா காந்தி, மீனவர்களுக்காக மத்திய அரசு பாடுபட்டு வருவதாகக் கூறினார். ஆனால், தமிழக மீனவர்கள் பிரச்னையில் மத்திய அரசும், மாநில அரசும் பரஸ்பரம் ஒன்றையொன்று குற்றம் சொல்கின்றன.
அதாவது, அம்மா மேடத்தின் மீதும், மேடம் அம்மா மீதும் குறைகூறி வருகிறார்கள். இவர்களின் மோதலால் மீனவர்களை இலங்கை கடற்படையினர் அடித்துத் துன்புறுத்தியும், சிறைப்படுத்தியும் வருகிறார்கள். மீனவர்கள் பாதுகாப்புடன் வாழ வேண்டுமானால் இந்தியாவில் வலுவான அரசு அமைய வேண்டும். மீனவர்கள் வாழ்வு சிறக்க நான் ஒரு சபதம் எடுக்கிறேன். இன்றைய அறிவியலையும், தொழில்நுட்பத்தையும் பயன்படுத்தி மீனவர்களுக்காக நன்மை செய்ய உறுதி எடுத்துள்ளேன்.
இவ்வாறு நரேந்திர மோடி பேசினார்.












Click it and Unblock the Notifications