ஜெ., வுக்காக திருப்பதியில் பூஜை- ஏழுமலையானின் அருளால் மீண்டு வந்து ஆட்சி புரிவார்: சந்திரபாபு நாயுடு
சென்னை: ஏழுமலையானின் அருளால் அவர் மீண்டு வந்து ஆட்சி புரிவார் என்று ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு கூறியுள்ளார்.
ஜெயலலிதா விரைவில் குணமடைய வேண்டி திருப்பதியில் சிறப்புப் பிரார்த்தனை நடத்த ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு உத்தரவிட்டதை அடுத்து திருப்பதி ஜீயர்கள் சென்னை வந்து திருப்பதி ஏழுமலையன் பிராத்தனை தொடர்பான பிரசாதத்தையும் , லட்டையும் அப்பல்லோ மருத்துவமனையில் வழங்கி சென்றனர்.
தமிழக முதல்வர் ஜெயலலிதா உடல்நலக்குறைவு காரணமாக கடந்த 22ம் தேதி முதல் மருத்துவமனையில் அனுமதிகப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். ஜெயலலிதா நலம் பெற வேண்டும் என்று அவரது தொணடர்கள் மற்றும் பொது மக்கள் ஆங்காங்கே சிறப்பு வழிப்பாட்டில் ஈடுபட்டு வருகின்றனர்.
தமிழக முதல்வர் விரைவில் குணமடைய வேண்டும். மீண்டும் அவர் தமிழ் மக்களுக்கு தொண்டாற்ற வேண்டும் என்று வாழ்த்து கூறியிருக்கிறார் ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு.
ஜெயலலிதா சிகிச்சை
முதல்வர் ஜெயலலிதா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு 22 நாட்கள் ஆகும் நிலையில் அவரது உடல் நலம் குறித்து நாடெங்கும் உள்ள தலைவர்கள், ஆட்சிப் பொறுப்பில் உள்ளவர்கள் நேரில் வந்து விசாரித்துச் செல்கின்றனர். நேரில் வர இயலாதவர்கள் தங்கள் வாழ்த்துகளைத் தெரிவித்து வருகின்றனர். தமிழகத்தில் உள்ள பெரும்பாலான அரசியல் கட்சித் தலைவர்கள் பிரபலங்கள் முதல்வரைக் காண வந்து செல்கின்றனர்.
சந்திரபாபு நாயுடு வாழ்த்து
இந்நிலையில், ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு முதல்வர் ஜெயலலிதா பூரண குணமடைய வாழ்த்து தெரிவித்து கடிதம் அனுப்பினார். ஆந்திர அரசின் சார்பாகவும் தனது சார்பாகவும் திருப்பதி கோவிலில் விசேஷ பூஜை செய்து பிரசாதத்தை அனுப்பிவைக்க உத்தரவிட்டுள்ளதாகத் தெரிவித்திருந்தார்.
ஜெ., குணமடைவார்
இதுகுறித்து செய்தியாளர்களிடம் பேசிய சந்திரபாபு நாயுடு, 'உடல் நலக் குறைவால் மருத்துவமனையில் தொடந்து சிகிச்சை பெற்று வரும் தமிழக முதல்வர் ஜெயலலிதா, விரைவில் குணமடைந்து மீண்டும் மக்களுக்கு தொண்டு செய்வார். இதில் எனக்கு நம்பிக்கை உள்ளது என்றார்.
ஏழுமலையான் அருள்
ஏழுமலையானின் அருளால் அவர் மீண்டு வந்து ஆட்சி புரிவார். அவர் குணமடைய வேண்டி திருப்பதி ஏழுமலையான் கோயிலில் சிறப்பு பிராத்தனை நடத்தி அவருக்கு லட்டு, தீர்த்த பிரசாதம் அனுப்ப உத்தரவிடப்பட்டுள்ளது என்றும் சந்திரபாபு நாயுடு கூறினார்.
|
லட்டு பிரசாதம்
இதனையடுத்து அப்பல்லோ மருத்துவமனைக்கு வந்த திருப்பதி ஜீயர்கள் முதல்வர் நலம் பெற வேண்டி நடத்திய சிறப்பு பிராத்தனை தொடர்பான பிரசாதம், லட்டு, அங்க வஸ்திரத்தையும் அப்பல்லோ மருத்துவமனையில் வழங்கி சென்றனர். இந்த தகவல் அதிமுகவின் அதிகாரப்பூர்வ டுவிட்டர் பக்கத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது. முதல்வர் ஜெயலலிதா இன்றும் சில நாட்கள் மருத்துவமனையில் தங்கியிருக்க வேண்டும் என்றும் அப்பல்லோ மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.