தமிழகத்தை மாற்றுவது பாமகவால் மட்டுமே முடியும்- டாக்டர் ராமதாஸ்
வேலூர்: தமிழகத்தில் மாற்றத்தை ஏற்படுத்துவதற்கான திட்டங்கள் பாமகவின் கையில் மட்டுமே உள்ளது. பாமகவால் மட்டுமே இது சாத்தியம் என்று அக்கட்சியின் நிறுவனர் மருத்துவர் ராமதாஸ் வேலூரில் தெரிவித்துள்ளார்.
பா.ம.கவின் வடக்கு மண்டல மாநாடு வேலூர் மாவட்டம் பள்ளிகொண்டாவில் நடைபெற்றது. இதில் உரையாற்றிய அக்கட்சியின் நிறுவனர் டாக்டர் ராமதாஸ், "திமுக, அதிமுக ஆகிய இரண்டு கட்சிகளிலும் கொள்கை என்பதே இல்லை. அதிமுக தலைமை, அக்கட்சியின் அமைச்சர்களையும், நிர்வாகிகளையும் அடிமையாக நடத்தி வருகின்றது.
"மாற்றம், முன்னேற்றம் - அன்புமணி" என்ற போஸ்டர் கடந்த 11 ஆம் தேதி தமிழகம் முழுவதும் ஒட்டப்பட்டது. இதனால் பல அரசியல் கட்சிகள் எரிச்சல் அடைந்துள்ளன. என்ன செய்வது என்றே தெரியாமல் விழிக்கின்றனர்.
எங்களுக்கு, மற்றவர்களை போல வசனம் பேசி மக்களை கவர தெரியாது. மக்கள் மொழியில் பேசுகிறோம். எங்களிடம் தமிழகத்தை முன்னேற்றுவதற்கான திட்டங்கள் உள்ளது. இது தொடர்பாக நாங்கள் விவாதிக்கவும் தயார்.
தி.மு.கவும், அ.தி.மு.கவும், சாராயத்தை கொடுத்து தமிழகத்தை குட்டிச்சுவர் ஆகிவிட்டன. தமிழகத்தில் மாற்றத்தை விதைக்க இனி பா.ம.கவால் மட்டுமே முடியும்" என்று தெரிவித்தார்.
கொங்கு மண்டல மாநாடு, சோழ மண்டல மாநாட்டைத் தொடர்ந்து தற்போத்து வடக்கு மண்டல மாநாட்டை பாமக நடத்தியுள்ளது குறிப்பிடத்தக்கது.