கோகுல்ராஜ் கொலை வழக்கு: யுவராஜ் உள்ளிட்ட 17 பேருக்கு குற்றப்பத்திரிக்கை நகல் விநியோகம்
நாமக்கல்: தலித் இளைஞர் கோகுல்ராஜ் கொலை வழக்கில் குற்றம்சாட்டப்பட்டுள்ள யுவராஜ் உள்ளிட்ட 17 பேருக்கும் நாமக்கல் தலைமை குற்றவியல் நீதிமன்றத்தில் 1,318 பக்கங்களை கொண்ட குற்றப்பத்திரிகை நகல் வழங்கப்பட்டது.
சேலம் மாவட்டம் ஓமலூரை சேர்ந்த பொறியியல் பட்டதாரி கோகுல்ராஜ், 24 கடந்த ஜூன் 24ம் தேதி பள்ளிபாளையம் அருகே ரயில்வே தண்டவாளத்தில் கொலை செய்யப்பட்டு கிடந்தார்.
தற்கொலை வழக்காக பதிவு செய்யப்பட்டு பின்னர் கொலை வழக்காக மாற்றப்பட்டது. இந்த வழக்கை விசாரித்த பெண் டிஎஸ்பி விஷ்ணுபிரியா தற்கொலை செய்து கொண்டார். இதனையடுத்து கோகுல்ராஜ் கொலை வழக்கு சிபிசிஐடி விசாரணைக்கு மாற்றப்பட்டது.
இந்த வழக்கின் முக்கிய குற்றவாளியான தீரன்சின்னமலை பேரவை நிறுவனர் யுவராஜ் ,39 கடந்த அக்டோபர் 11ம் தேதி, நாமக்கல் சிபிசிஐடி அலுவலகத்தில் சரண் அடைந்தார்.
இந்த வழக்கில் 17 பேர் கைது செய்யப்பட்டனர். இவர்களில் 10 பேர் ஜாமீனில் வெளிவந்துள்ளனர். யுவராஜ் உள்ளிட்ட 7 பேர் குண்டர் சட்டத்தில் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். கடந்த டிசம்பர் மாதம் சிபிசிஐடி போலீசார், நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்தனர்.
இந்த வழக்கு விசாரணை நேற்று நாமக்கல் தலைமை குற்றவியல் நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. அப்போது குற்றம் சாட்டப்பட்ட யுவராஜ் உள்ளிட்ட 17 பேரும் ஆஜர்படுத்தப்பட்டனர். அப்போது நீதிபதி மலர்மதி, கோகுல்ராஜ் கொலை வழக்கு விசாரணை இனிமேல், மாவட்ட முதன்மை நீதிமன்றத்தில் நடைபெறும். வழக்கை அங்கு மாற்றியுள்ளேன். வரும் 17ம் தேதி 17 பேரும் மாவட்ட முதன்மை நீதிமன்றத்தில் ஆஜராகவேண்டும் என்றார்.
இதையடுத்து 17 பேருக்கும் 1,318 பக்கங்களை கொண்ட குற்றப்பத்திரிகை நகல் வழங்கப்பட்டது. குற்றப்பத்திரிகை நகலை படித்து பார்த்த பிறகே கையெழுத்து போடுவோம் என யுவராஜ் கூறினார்.
மேல் நீதிமன்றத்தில் வழக்கு நடத்தும் போது வக்கீல் மூலம் அதைப்பற்றி சொல்லுங்கள். தற்போது இந்த வழக்கை மேல் நீதிமன்றத்திற்கு மாற்றுகிறேன். அதற்கு அனைவரும் கையெழுத்திடுங்கள் என்று நீதிபதி கூறினார். அதைத்தொடர்ந்து அனைவரும் கையெழுத்திட்டனர். வரும் 17ம் தேதி முதல் கோகுல்ராஜ் கொலை வழக்கு விசாரணை சூடுபிடிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.