கொட்டித் தீர்த்த கனமழை.. சென்னைக்கு குடிநீர் வழங்கும் ஏரிகளின் நீர்மட்டம் உயரவில்லையே!
கனமழை பெய்த போதும் சென்னைக்கு குடிநீர் வழங்கும் ஏரிகளின் நீர்மட்டம் எதிர்பார்த்த அளவு உயரவில்லை.
சென்னை: வர்தா புயலால் சென்னை மற்றும் அதன் சுற்று வட்டாரப் பகுதிகளில் கனமழை கொட்டித் தீர்தது. இருப்பினும் சென்னைக்கு குடிநீர் வழங்கும் ஏரிகளின் நீர்மட்டம் எதிர்பார்த்த அளவு உயரவில்லை.
தமிழ்நாட்டில் வடகிழக்கு பருவமழை கடந்த அக்டோபர் மாதம் தொடங்கியது. நவம்பர் மாதம் பருவமழை அதிகம் பெய்யும். ஆனால், இந்த ஆண்டு எதிர்பார்த்த அளவு மழை பெய்யவில்லை. சென்னையை பொறுத்த வரை கடந்த ஆண்டை ஒப்பிடுகையில் இந்த ஆண்டு மழையின் அளவு குறைவு.

கடந்த 2015 -ம் ஆண்டு டிசம்பரில் கொட்டித் தீர்த்த கனமழையால் சென்னை நகரமே வெள்ளத்தில் மூழ்கியது. சென்னைக்கு குடிநீர் ஆதாரமாக விளங்கும் பூண்டி, சோழவரம், புழல், செம்பரம்பாக்கம் ஆகிய 4 ஏரிகளும் அதன் முழு கொள்ளளவை எட்டியது. ஆனால் தற்போது வங்க கடலில் உருவான வர்தா புயலால் சென்னை அருகே கரையைக் கடந்தது. புயலால் கனமழை பெய்தாலும் சென்னையில் எதிர்பார்த்த அளவு நீர்மட்டம் உயரவில்லை. மாறாக இவை ஏற்படுத்திய பாதிப்புகள் தான் அதிகம்.
தற்போதைய சூழ்நிலையில் சென்னைக்கு குடிநீர் வழங்கும் பூண்டி, சோழவரம், புழல், செம்பரம்பாக்கம் ஆகிய 4 ஏரிகளின் மொத்த கொள்ளளவு 11 ஆயிரத்து 57 மில்லியன் கன அடியாகும். ஆனால் தற்போது 1.63 டி.எம்.சி. தண்ணீர் இருப்பு உள்ளது. இதன் மூலம் 40 நாட்களுக்கு நம்முடைய குடிநீர் தேவையை பூர்த்தி செய்ய முடியும்.
வர்தா புயல் காரணமாக கொட்டித்தீர்த்த கனமழையால் சென்னையை சுற்றியுள்ள முக்கிய ஏரிகளில் 41 மில்லியன் கனஅடி நீர் உயர்ந்துள்ளது. கடந்த ஆண்டை ஒப்பிடுகையில் இந்த ஆண்டின் தண்ணீர் இருப்பு மிகவும் குறைவாகவே உள்ளது.












Click it and Unblock the Notifications