அடுத்தடுத்து மோதிய 3 வாகனங்கள்.. செங்கல்பட்டில் 4 கிமீக்கு வரிசைகட்டிய வாகனங்கள்.. கோர விபத்து!
செங்கல்பட்டு: செங்கல்பட்டு மாவட்டத்தில் உள்ள பாலாற்று பாலம் அருகே ஏற்பட்ட விபத்து காரணமாக 4 கிமீ தூரத்திற்கு கடுமையான போக்குவரத்து நெரிசல் நேற்று ஏற்பட்டது.
செங்கல்பட்டு மாவட்டம் இருகுன்றப்பள்ளி மற்றும் மாமண்டூர் ஆகிய பகுதிகளை இணைக்கும் வகையில் பாலாற்று பாலம் அமைக்கப்பட்டுள்ளது. இது தேசிய நெடுஞ்சாலையில் அமைக்கப்பட்டுள்ள பாலம் ஆகும்.
இங்கு தினமும் பல லட்சம் வாகனங்கள் செல்லும். தென் மாவட்டங்களை சென்னையோடு இணைக்கும் முக்கியமான வழியாகும் இது.

செங்கல்பட்டு பாலம்
முக்கியமாக மதுரை, திருச்சி உள்ளிட்ட மாவட்டங்களுக்கு செல்லும் வாகனங்கள் இந்த பாலம் வழியாகவே அதிகம் செல்லும். அதேபோல் அரசு பேருந்துகள், கனரக வாகனங்கள் இந்த பாலத்தை அதிகம் பயன்படுத்துவது குறிப்பிடத்தக்கது. பல லட்சம் பயணிகள் இந்த பாலம் வழியாக செல்லும் நிலையில், இங்கு விபத்துகள் நடப்பது அதிகரித்து வருகிறது. வாகனங்கள் வேகமாக வருவதால் இங்கு அடிக்கடி விபத்துகள் ஏற்படுகின்றன.

செங்கல்பட்டு பாலாற்று பாலம்
நேற்று இந்த பாலம் அருகே அரசு பேருந்து மீது வாகனம் மோதி விபத்துக்கு உள்ளானது. மெதுவாக சென்ற அரசு பேருந்து மீது, பின்னால் வேகமாக வந்த கார் ஒன்று மோதியது. இதையடுத்து அந்த காருக்கு பின்னால் வந்த மேலும் சில வாகனங்கள் அடுத்தடுத்து அந்த கார் மீது மோதியது. மொத்தம் ஒன்றன் பின் ஒன்றாக 3 வாகனங்கள் பேருந்து மீது மோதி உள்ளது. மூன்று கார்களும் அங்கும், இங்கும் கவிழ்ந்து சாலையை மொத்தமாக அடைத்தது.

விபத்து
இதனால் பின்னால் வந்த வாகனங்கள் வேகமாக பிரேக் போட்டன. இதையடுத்து அந்த பகுதிகளில் கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. நீண்ட தூரத்திற்கு அங்கு வாகனங்கள் காத்திருந்தன. நேரம் செல்ல செல்ல அங்கு வாகனங்கள் வரிசைகட்டி நின்றன. மொத்தம் 4 கிமீ தூரத்திற்கு அங்கு வாகனங்கள் வரிசையில் நின்றன. நேற்று மாலை 6 மணி அளவில் இந்த சம்பவம் நடைபெற்றது.

போக்குவரத்து நெரிசல்
சுமார் 3 மணி நேரம் போக்குவரத்து நெரிசல் அங்கு காணப்பட்டது. அங்கு விபத்து செய்தி அறிந்ததும் போலீசார் குவிந்தனர். விபத்தில் காயம் அடைந்தவர்களை மீட்டு மருத்துவமனையில் அனுமதித்தனர். அதன்பின் விபத்துக்கு உள்ளான வாகனங்களை கிரேன் உதவியுடன் அங்கிருந்து அகற்றி போக்குவரத்தை சரி செய்தனர். இந்த விபத்து தொடர்பாக வழக்கு பதிவு செய்யப்பட்டு விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.












Click it and Unblock the Notifications