சென்னை ஏர்போர்ட் மூழ்கிய படங்களை 'அகமதாபாத்' விமான நிலையம் பாதிப்பு செய்திக்கு பயன்படுத்திய ஊடகங்கள்
குஜராத்தில் கடும் மழை பெய்து வரும் நிலையில் சென்னை வெள்ளத்தின்போது விமான நிலையம் மூழ்கிய படங்களை போட்டு இதுதான் அகமதாபாத் விமான நிலையம் என ஊடகங்கள் வெளியிட்டதற்கு சமூக வலைதளங்களில் கடும் கண்டனம்
சென்னை: குஜராத்தில் வெள்ளத்தில் பாதிக்கப்பட்ட அகமதாபாத் விமான நிலையம் என சென்னை விமான நிலையம் வெள்ளத்தில் மூழ்கிய பழைய படங்களை ஊடகங்கள் வெளியிட்டது பெரும் சர்ச்சையாக வெடித்துள்ளது.
குஜராத்தில் கடந்த சில தினங்களாக கனமழை பெய்து வருகிறது. இதனால் வெள்ள நீரில் அடித்துச் செல்லப்பட்டு 100-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துவிட்டனர்.
அங்குள்ள நீர் நிலைகள் நிரம்பி வழிந்ததால் தாழ்வான இடங்களில் தண்ணீர் தேங்கியுள்ளது. வெள்ளத்தில் சிக்கிய 50,000க்கும் அதிகமானோர் பாதுகாப்பாக மீட்கப்பட்டுள்ளனர்.
|
அகமதாபாத் விமான நிலையம்
இந்த கன மழையில் அகமதாபாத் விமான நிலையம் நீரில் மூழ்கியது போன்ற புகைப்படங்கள் வெளியிடப்பட்டுள்ளன. ஆனால் அவை அனைத்தும் 2015-ம் ஆண்டு வெள்ளத்தின்போது மூழ்கிய சென்னை விமான நிலையத்தின் படங்கள்.

ஊடகங்களும்...
பெரும்பாலான ஊடகங்களும் சென்னை விமான நிலையம் வெள்ளத்தில் மூழ்கிய படங்களை போட்டு இதுதான் அகமதாபாத் விமான நிலையம் என்று செய்தி வெளியிட்டுள்ளன. சமூக வலைதளங்களில் இந்த பித்தலாட்டத்தை சுட்டிக்காட்டி நெட்டிசன்கள் வறுத்தெடுத்து வருகின்றனர்.
|
ஸ்மிருதி இரானி
இந்த படத்தை முதலில் வெளியிட்டது செய்தி நிறுவனமான பிடிஐதான். இது தொடர்பாக தமது ட்விட்டர் பக்கத்தில் மத்திய தகவல் மற்றும் ஒலிபரப்புத் துறை அமைச்சர் ஸ்மிருதி இரானி சுட்டிக்காட்டியும் இருந்தார். அத்துடன் பிடிஐ நிறுவனத்திடம் விளக்கம் கேட்கப்படும் எனவும் கூறியிருந்தார்.
|
பிடிஐ வருத்தம்
இதனைத் தொடர்ந்து பிடிஐ தமது தவறுக்கு வருத்தம் தெரிவித்தது. அத்துடன் சம்பந்தப்பட்ட புகைப்படக் கலைஞரை நீக்கிவிட்டதாகவும் பிடிஐ ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்திருக்கிறது.
|
பிரசார் பாரதி
மேலும் இப்படங்களை தூர்தர்ஷனும் கூட வெளியிட்டது. ஸ்மிருதி இரானியின் ட்வீட்டுக்குப் பின்னர் பிரசார் பாரதியின் சிஇஓ சஷி சேகரும் வருத்தம் தெரிவித்திருந்தார்.












Click it and Unblock the Notifications