ஜெ-சசி மீதான வருமான வரி வழக்கில் சமரசம் ஏற்படுமா? மாலையில் முடிவு
சென்னை: ஜெயலலிதா மற்றும் அவரது தோழி சசிகலா ஆகியோரின் சமரச மனுக்கள் மீது முடிவு எடுக்க புதிய கமிட்டி அமைக்கப்பட்டுள்ளதாகவும், இந்த கமிட்டி எடுக்கும் முடிவு பிற்பகலில் நீதிமன்றத்தில் தெரிவிக்கப்படும் என்றும் வருமான வரித்துறை தெரிவித்ததால் வழக்கு விசாரணையை மாலைக்கு நீதிபதி ஒத்திவைத்தார்.
1991-92, 1992-93 ஆண்டுகளில் முதல்வர் ஜெயலலிதா, அவரது தோழி சசிகலா ஆகியோர் வருமான வரி கணக்கை தாக்கல் செய்யவில்லை என்று வருமான வரித்துறை தொடர்ந்த வழக்கு சென்னை எழும்பூர் நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது.
இதனிடையே, இந்த விவகாரத்தை வருமான வரித்துறையுடன் பேசி தீர்த்துக்கொள்வதாகவும், வருமான வரித் தொகையை அபராதத்துடன் கட்டவும் தயாராக இருப்பதாகவும் ஜெயலலிதா, சசிகலா தரப்பில் மனு தாக்கல் செய்யப்பட்டது.
இது குறித்து வருமான வரித்துறையிடம் கேட்டு முடிவு செய்வதாக வருமான வரித்துறை சார்பில் ஆஜரான வழக்கறிஞர் ராமசாமி தெரிவித்திருந்தார்.
இந்நிலையில், இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது, ஜெயலலிதாவின் சமரச மனு மீது முடிவு எடுக்க புதிய கமிட்டி அமைக்கப்பட்டுள்ளது என்றும், இந்த கமிட்டி இன்று முடிவு எடுக்க உள்ளது என்றும், புதிய கமிட்டி எடுக்கும் முடிவு பிற்பகலில் நீதிமன்றத்தில் தெரிவிக்கப்படும் என்றும் வருமான வரித்துறை வழக்கறிஞர் ராமசாமி தெரிவித்தார்.
இதையடுத்து, வழக்கு விசாரணையை மாலை 4 மணிக்கு நீதிபதி ஒத்திவைத்தார்.