தமிழகத்தில் 39 தொகுதிகளிலும் மறு தேர்தல் நடத்த கோரிய மனுவை ஹைகோர்ட் தள்ளுபடி
தமிழகத்தில் உள்ள 39 நாடாளுமன்ற தொகுதிகளில் மறு தேர்தல் நடத்த கோரி சமூக சேவகரான டிராபிக் ராமசாமி சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு ஒன்றை தாக்கல் செய்தார்.
அந்த மனுவில் அவர் கூறியிருப்பதாவது,
தமிழகத்தில் உள்ள 39 தொகுதிகளிலும் மறுதேர்தல் நடத்த வேண்டும் என்று கடந்த ஏப்ரல் 30ம் தேதி இந்திய தேர்தல் ஆணையத்துக்கு விண்ணப்பம் செய்தேன். ஆனால் எனது மனு மீது இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.
எனவே, என் மனுவை பரிசீலித்து தமிழகத்தில் உள்ள 39 நாடாளுமன்ற தொகுதிகளுக்கும் மறுதேர்தல் நடத்த வேண்டும் என்று தேர்தல் ஆணையத்துக்கு நீதிமன்றம் உத்தரவிட வேண்டும் என்று அவர் அதில் தெரிவித்துள்ளார்.
இந்த மனு நீதிபதிகள் எம்.எம்.சுந்தரேஷ், கே.ரவிசந்திரபாபு ஆகியோர் முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது மனு குறித்து பதிலளிக்க தேர்தல் ஆணையத்துக்கு மனுதாரர் நோட்டீஸ் அனுப்ப வேண்டும் என்று உத்தரவிட்டனர்.
இந்த நிலையில், இந்த வழக்கு தலைமை நீதிபதி சதீஷ்குமார் அக்னிகோத்ரி, நீதிபதி எம்.எம்.சுந்தரேஷ் ஆகியோர் முன்பு விசாரணைக்கு வந்தது. மனுவை விசாரித்த நீதிபதிகள் இது விசாரணைக்கு உகந்தது அல்ல என்று கூறி மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டனர்.