தமிழக நெடுஞ்சாலைகளில் திறக்கப்பட்ட 1300 மதுக்கடைகள்.. மூடக்கோரிய மனு ஹைகோர்ட்டில் தள்ளுபடி
சென்னை: தமிழக நெடுஞ்சாலையில் திறக்கப்பட்ட 1,300 மதுக்கடைகளை மீண்டும் மூடக்கோரிய மனுவை தள்ளுபடி செய்து சென்னை ஹைகோர்ட் உத்தரவிட்டுள்ளது.
தேசிய மற்றும் மாநில நெடுஞ்சாலைகளில் உள்ள மதுக்கடைகளை மூட உச்ச நீதிமன்றம் கடந்தாண்டு உத்தரவிட்டது. இதையடுத்து, தமிழகத்தில் தேசிய மற்றும் மாநில நெடுஞ்சாலைகளில் இருந்த 3 ஆயிரத்து 600க்கும் மேற்பட்ட மதுக்கடைகள் மூடப்பட்டன.
பின்னர், மாநில நெடுஞ்சாலைகளை நகராட்சி சாலைகளாக மாற்றி மாநில அரசுகள் மதுக்கடைகளை திறக்க அனுமதித்தன.
இதையடுத்து, தமிழக அரசு எந்த முன்னறிவிப்பும் இல்லாமல் பல இடங்களில் மதுபான கடைகளை திறந்தது. நெடுஞ்சாலைகளில் மூடப்பட்ட 1,300 மதுக்கடைகளை மீண்டும் திறக்க கடந்த மே மாதம் தமிழக அரசு அரசாணை வெளியிடப்பட்டது.
இந்த அரசாணையை ரத்து செய்ய கோரி, பாமக வழக்கறிஞர் அணி தலைவர் கே.பாலு தொடர்ந்த வழக்கு தொடரப்பட்டது. இதை இன்று தள்ளுபடி செய்துள்ளது ஹைகோர்ட்.
ஏற்கனவே இதுதொடர்பான வழக்கு உச்சநீதிமன்றத்தில் இருப்பதால், இந்த மனுவை தள்ளுபடி செய்வதாக சென்னை உயர் நீதிமன்றம் கூறியதோடு, மனுதாரர் சுப்ரீம் கோர்ட்டை அணுகிக்கொள்ளலாம் என அறிவித்துள்ளது.
கே.பாலு சார்பில் ஏற்கனவே சுப்ரீம் கோர்ட்டில் கேவியட் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. அதில், 'மேல்முறையீடு வழக்கில் முக்கிய மனுதாரரான எங்கள் தரப்பை கேட்காமல் எந்த உத்தரவையும் பிறப்பிக்கக் கூடாது' என குறிப்பிட்டிருந்தார்.