ஹைகோர்ட் உத்தரவால் கைது நடவடிக்கையிலிருந்து தற்காலிகமாக தப்பிய செந்தில் பாலாஜி!
முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜியை அக்டோபர் 3 வரை கைது செய்ய சென்னை உயர்நீதிமன்றம் இடைக்காலத் தடை விதித்து உத்தரவிட்டுள்ளது.
சென்னை : பணமோசடி வழக்கில் முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜியை கைது செய்ய அக்டோபர் 3ம் தேதி வரை இடைக்காலத் தடை விதித்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
கரூர் மாவட்டம் அரவக்குறிச்சி சட்டமன்ற தொகுதி எம்.எல்.ஏ.வான முன்னாள் அமைச்சர் செந்தில்பாலாஜி டி.டி.வி. தினகரனின் தீவிர ஆதரவாளராக இருந்து வருகிறார். முதல்வர் பழனிசாமிக்கு எதிராக தினகரன் சிறையில் இருந்த சமயத்திலும் தொடர்ந்து குடைச்சல் கொடுத்து வந்தவர்.
இந்நிலையில் முதல்வர் பழனிசாமி மீது நம்பிக்கை இல்லை என ஆளுநரிடம் மனு கொடுத்த 18 பேரில் இவரும் ஒருவர். செந்தில்பாலாஜியை குடகு விடுதியில் தமிழக போலீசார் சந்தித்து எடப்பாடி பழனிசாமிக்கு ஆதரவு தெரிவிக்க 15 கோடி ரூபாய் வரை கோடிக்கணக்கில் பேரம் பேசியதாக தெரிவித்தார்.
இந்த நிலையில் செந்தில் பாலாஜி போக்குவரத்து துறை அமைச்சராக இருந்த போது வேலை வாங்கி தருவதாக ரூ.4½ கோடி மோசடி செய்ததாக மத்திய குற்றப்பிரிவு போலீசாரால் வழக்கு பதிவு செய்யப்பட்டிருந்தது. இந்த வழக்கில் தற்போது அவரை கைது செய்ய போலீசார் நடவடிக்கை எடுத்து வருகின்றனர். இதையடுத்து செந்தில் பாலாஜி முன் ஜாமீன் கோரி சென்னை ஹைகோர்ட்டில் கடந்த வாரம் மனு தாக்கல் செய்திருந்தார்.
இந்த மனுவை இன்று சென்னை உயர்நீதிமன்றம் விசாரித்தது. அப்போது அரசுத் தரப்பில் செந்தில் பாலாஜிக்கு ஜாமின் தர எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது. செந்தில் பாலாஜிக்கு ஜாமின் தந்தால் தலைமறைவாகிவிடுவார் என்று அரசு வக்கீல் கூறினார். இதனையடுத்து வழக்கு விசாரித்த நீதிபதி செந்தில்பாலாஜியை அக்டோபர் 3 வரை கைது செய்ய இடைக்காலத் தடை விதித்து உத்தரவிட்டுள்ளார்.