வேலை கோரி சென்னை ஐ.சி.எப். அப்ரண்டீஸ் மாணவர் ஹேமந்த்குமார் தீக்குளித்து தற்கொலை
சென்னை: சென்னை பெரம்பூர் ரயில் பெட்டி இணைப்பு தொழிற்சாலையான ஐ.சி.எப்.-ல் வேலை கோரி அப்ரண்டீஸ் மாணவர் ஹேமந்த்குமார் தீக்குளித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

மத்திய அரசு நிறுவனமான ஐ.சி.எப்.-ல் தமிழகத்தைச் சேர்ந்தவர்களுக்கு வேலை வாய்ப்பில் முன்னுரிமை வழங்கப்பட வேண்டும் என்பது நீண்டகால கோரிக்கை. கடந்த ஜூலை மாதம் ஐ.சி.எப்-ல் பயிற்சி பணி முடித்த தமிழ் மாணவர்களுக்கே வேலை வாய்ப்பு வழங்க வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி பல்வேறு தமிழ் அமைப்புகள் பிரமாண்ட போராட்டத்தை நடத்தியிருந்தன.

கடந்த 1-ந் தேதியன்றும் இதேகோரிக்கையை வலியுறுத்தி ரயில்வே துறை பொதுமேலாளர் அலுவலகத்தை முற்றுகையிடும் போராட்டம் நடத்தப்பட்டது. இந்நிலையில் இன்று காலை 8 மணியளவில் தெற்கு ரயில்வே பொதுமேலாளர் அலுவலகம் முன்பாக சென்னை கொளத்தூரைச் சேர்ந்த ஐ.சி.எப். பயிற்சி வகுப்பு மாணவர் ஹேமந்த்குமார் திடீரென தீக்குளித்தார். பின்னர் அவர் பலத்த தீக்காயங்களுடன் சென்னை கீழ்ப்பாக்கத்தில் அனுமதிக்கப்பட்டார்.

அங்கு சிகிச்சை பலனின்றி பகல் 1.45 மணியளவில் உயிரிழந்தார். இச்சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
பெ. மணியரசன் தலைமையிலான தமிழ்த் தேசிய பேரியக்கம் வெளியிட்டுள்ள அறிக்கையில், வேலை கேட்டு தீக்குளித்து மரணமடைந்த ஹேமந்த் குமாருக்கு வீரவணக்கத்தை தெரிவித்துக் கொள்கிறது என தெரிவிக்கப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications