‛ரீஃபண்ட்' வேண்டுமா? ‛ஆன்-லைன்' மூலம் மட்டுமே வரிதாக்கல் செய்ய வருமான வரித்துறை அறிவுறுத்தல்
சென்னை : வருமான வரம்பு ரூ.5 லட்சத்துக்கு மேற்பட்டவர்களும், வருமான வரி பிடித்தம் செய்ததை திரும்ப பெற விரும்புபவர்களும் ‛ஆன்-லைன்' மூலம் மட்டுமே வருமான வரித்தாக்கல் செய்ய வேண்டும் என வருமான வரித்துறை அறிவித்துள்ளது.
இதுகுறித்து, சென்னையில் உள்ள வருமான வரித்துறை அலுவலகம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது...
வருமான வரித் தாக்கல் வருமானவரி அலுவலகத்தில் நேரடியாகவும், கணினியில் ‛ஆன்-லைன்' மூலமும் செலுத்தும் வசதி உள்ளது.
எனினும், ரூ.5 லட்சத்துக்கும் மேற்பட்ட வருமானம் பெறுபவர்கள், வருமானவரி பிடித்தம் செய்ததை திரும்ப பெற விரும்புபவர்கள் (ரீஃபண்ட்) மற்றும் வியாபாரம், தொழில் மூலம் வருமானம் பெறுபவர்கள் ஆகியோர் ‛ஆன்-லைன்' மூலம் மட்டுமே வருமானவரித் தாக்கல் செய்ய வேண்டும். 80 வயதுக்கு உட்பட்டவர்களுக்கு மட்டுமே மேற்கண்ட இந்த விதிகள் பொருந்தும்.
மேலும், வருமான வரி செலுத்துபவர்கள் தங்களுடைய வருமானவரி தாக்கல் செய்வதற்கான அலுவலகங்கள், புதிதாக வரையறுக்கப்பட்டுள்ள எல்லை குறித்து கண்டறிய www.tnincometax.gov.in என்ற இணையதளத்தில் சென்று ‛Know Your Jurisdiction' என்பதை கிளிக் செய்து தெரிந்து கொள்ளலாம்.
இவ்வாறு வருமான வரித்துறை வெளியிட்டுள்ள செய்திக்
குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.