சென்னையில் பெண்களை விட அதிக அளவில் ஓட்டு போட்ட ஆண்கள்
சென்னை: நாடாளுமன்ற தேர்தலில் சென்னையில் ஆண்கள் தான் அதிக அளவில் வாக்களித்துள்ளனர்.
தமிழகத்தில் நாடாளுமன்ற தேர்தலுக்கான வாக்குப்பதிவு கடந்த வியாழக்கிழமை காலை 7 மணிக்கு துவங்கி மாலை 6 மணி வரை நடைபெற்றது. இதில் சென்னையில் உள்ள 3 தொகுதிகளிலும் மிகக் குறைவான சதவீதம் பேரே வாக்களித்துள்ளனர். இதில் சென்னை தொகுதியில் பெண்களை விட ஆண்கள் தான் அதிக அளவில் வாக்களித்துள்ளனர்.
வடசென்னையில் வாக்களித்தவர்களில் 65.57 சதவீதம் பேர் ஆண்கள், 62.37 சதவீதம் பேர் பெண்கள். மேலும் மூன்றாம் பாலினத்தவர்கள் 3.03 சதவீதம் வாக்களித்துள்ளனர். வட சென்னையில் மொத்தம் 63.95 சதவீத வாக்குகள் பதிவாகின.
தென்சென்னையில் வாக்களித்தவர்களில் 61.76 சதவீதம் பேர் ஆண்கள், 58.99 சதவீதம் பேர் பெண்கள். இத்தொகுதியில் மூன்றாம் பாலினத்தவர்கள் 3.51 சதவீதம் பேர் வாக்களித்துள்ளனர். தென்சென்னையில் 60.37 சதவீதம் வாக்குகள் பதிவாகின.
மத்திய சென்னையில் வாக்களித்தவர்களில் 63.73 சதவீதம் பேர் ஆண்கள், 59.27 சதவீதம் பேர் பெண்கள். இத்தொகுதியில் மூன்றாம் பாலினத்தவர்கள் வாக்களிக்கவில்லை. மத்திய சென்னையில் மொத்தம் 61.49 சதவீத வாக்குகள் பதிவாகின.
ஆலந்தூர் இடைத்தேர்தலில் வாக்களித்தவர்களில் 66.20 சதவீதம் பேர் ஆண்கள், 62.73 சதவீதம் பேர் பெண்கள். இங்கும் மூன்றாம் பாலினத்தவர்கள் வாக்களிக்கவில்லை. ஆலந்தூரில் 64.60 சதவீதம் வாக்குகள் பதிவாகின.
சென்னையில் ஆண்கள் அதிக அளவில் வாக்களித்த போதிலும் மாநில அளவில் பெண்கள் தான் அதிகம் வாக்களித்துள்ளனர்.