24 மணி நேரத்திற்கு வெயில் கொடுமையில்லை... ஜில்ஜில் வானிலையை அனுபவிக்கலாம்!
தமிழகத்தில் அடுத்த 24 மணி நேரத்திற்கு மழை நீடிக்கும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
Recommended Video
சென்னை : வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக தமிழகம் முழுவதும் பரவலாக மழைக்கு வாய்ப்பு இருப்பதாக சென்னை வானியை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
வானிலை நிலவரம் குறித்து சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய வானிலை ஆய்வு மைய இயக்குனர் பாலச்சந்திரன் கூறியதாவது : தென்கிழக்கு அரபிக்கடலில் கர்நாடகா அருகே வளிமண்டல மேலடுக்கில் சுழற்சி நிலவுகிறது. இதனுடன் மேற்கு திசைக் காற்றும், வங்கக்கடலில் இருந்து வீசும் கிழக்கு திசைக் காற்றும் சந்திக்கும் பகுதி தென்இந்திய பகுதிகளில் நிலவுகிறது. இதன் காரணமாக கடந்த 24 மணி நேரத்தில் வடதமிழகத்தில் பரவலாக மழை பெய்துள்ளது.
அதிகபட்சமாக திருப்பத்தூரில் 8 செ.மீ மழையும், ஓமலூரில் 7 செ. மீ மழையும் பதிவாகியுள்ளது. அடுத்து வரும் 24 மணி நேரத்தில் வடதமிழகத்தில் ஓரிரு இடங்களிலும் தென் தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும் மிதமான மழைக்கு வாய்ப்பு இருக்கிறது. சென்னை மற்றும் புறநகர்ப் பகுதிகளில் விட்டுவிட்டு மழை பெய்யும். மீனவர்களுக்கு எந்த எச்சரிக்கையும் இல்லை கடலுக்கு மீன் பிடிக்க செல்லலாம் என்று பாலச்சந்திரன் தெரிவித்துள்ளார்.