ஜெயலலிதா உடல்நிலை பற்றி வலைத்தளங்களில் வதந்தி.. வங்கி ஊழியர் உட்பட இருவர் அதிரடி கைது
சென்னை: முதல்வர் ஜெயலலிதா உடல் நிலை குறித்து சமூக வலைத்தளங்கள் வாயிலாக, வதந்தி பரப்பி வந்த வங்கி ஊழியர் உட்பட இருவரை போலீசார் கைது செய்துள்ளனர்.
முதல்வர் ஜெயலலிதா கடந்த மாதம் 22ம் தேதி முதல் சென்னை, அப்பல்லோ மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். இந்நிலையில், அவரது உடல் நிலை குறித்து, பேஸ்புக், வாட்ஸ்அப், டிவிட்டர், வலைத்தளங்கள் போன்ற சமூக ஊடகங்கள் வழியாக வதந்திகள் தீவிரமாக பரப்பப்பட்டன.
இதுகுறித்து, அதிமுக தகவல் தொழில்நுட்ப பிரிவு செயலாளர் ராமச்சந்திரன், வடக்கு சென்னை, துணை செயலாளர் ராஜ்கமல் ஆகியோர் சென்னை சைபர் கிரைம் போலீசாரிடம் புகார் அளித்திருந்திருந்தனர். இதன்பேரில் போலீசார் 43 வழக்குகளை பதிவு செய்திருந்தனர்.
இந்நிலையில், வதந்தி பரப்பிய நாமக்கல்லை சேர்ந்த சாப்ட்வேர் இன்ஜினியர் சதீஷ் மற்றும் மதுரையை சேர்ந்த மாடசாமி ஆகியோர் கடந்த 10ம் தேதி கைது செய்யப்பட்டனர். இவர்கள் மீது 3 பிரிவுகளின்கீழ் போலீசார் வழக்குகளை பதிவு செய்தனர்.
இதன் தொடர்ச்சியாக, தூத்துக்குடியை சேர்ந்த தனியார் வங்கி ஊழியர், திருமணி செல்வம், சென்னையை சேர்ந்த தனியார் நிறுவன ஊழியர் பாலசுந்தரம் ஆகியோர் இன்று கைது செய்யப்பட்டதாக போலீசார் அறிவித்துள்ளனர்.
வதந்தி பரப்புவோருக்கு 7 வருடம் வரை சிறை தண்டனை வழங்க முடியும் என்றும் போலீசார் எச்சரித்துள்ளனர். இதனிடையே வதந்திகளை வேரறுக்க அரசு, ஜெயலலிதா குறித்த முழு உடல் தகுதி அறிக்கைகளை வழங்க வேண்டும் என்ற கோரிக்கை வெகுஜன மக்களிடையே எழுந்துள்ளது.