சென்னை போலீஸ் இன்று காலை 6 மணிக்கு பணியில் இருக்க வேண்டும்: கமிஷ்னர் அதிரடி உத்தரவு
அனைத்து காவலர்களும் காலை 6 மணிக்கு பணிக்கு வர சென்னை மாநகர காவல்துறை ஆணையர் கரண் சின்ஹா உத்தரவிட்டுள்ளார்.
சென்னை: தமிழகத்தில் அசாதாரண சூழல் நிலவி வருவதால், சென்னையில் அனைத்து காவலர்களும் காலை 6 மணிக்கு பணியில் இருக்க வேண்டும் என்று சென்னை மாநகர காவல் ஆணையர் கரண் சின்ஹா அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளார்.
முதல்வர் எடப்பாடி பழனிசாமி இல்லத்தில் அமைச்சர்கள் ஜெயக்குமார், சிவி சண்முகம், வெல்லமண்டி நடராஜன் உள்ளிட்ட மூத்த அமைச்சர்கள் நேற்று ஆலோசனையில் ஈடுபட்டனர். இதன் பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் ஜெயக்குமார், ஒரு குடும்பத்திடம் இருந்து கட்சி ஆட்சியை காப்பாற்றுவோம். தினகரன் குடும்பத்தை ஒதுக்கி விட்டு கட்சியும், ஆட்சியும் நடத்தப்பட வேண்டும் என்று கூறினார்.

இதையடுத்து தினகரன் ஆதரவு எம்.எல்.ஏக்களான தங்கதமிழ்ச்செல்வன், வெற்றிவேல், கதிர்காமு உள்ளிட்டோர் தினகரன் இல்லத்தில் முக்கிய ஆலோசனையில் ஈடுபட்டனர். இந்த ஆலோசனைக்கு பின்னர் இன்று மாலை 3 மணிக்கு அதிமுக தலைமை அலுவலகத்தில் எம்.எல்.ஏக்கள், மாவட்டச் செயலார்கள் கூட்டத்துக்கு தினகரன் அழைப்பு விடுத்துள்ளார்.
அதிமுகவின் மூத்த அமைச்சர்கள் சசிகலா குடும்பத்துக்கு எதிராக நிலைப்பாடு எடுத்துள்ள நிலையில் இந்தக் கூட்டம் முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது. அதிமுகவில் அடுத்தடுத்து நடைபெற்று வரும் அதிரடி திருப்பங்களால் தமிழகத்தில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. இதனால் சென்னையில் அசாதாரண சூழல் நிலவுவதால் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.
மேலும், சென்னையில் அனைத்து காவலர்களும் காலை 6 மணிக்கு பணியில் இருக்க வேண்டும் என்று உத்தரவிடப்பட்டுள்ளது. சென்னை நகர காவல் ஆணையர் கரண் சின்ஹா காவலர்களுக்கு உத்தரவிட்டுள்ளார்.












Click it and Unblock the Notifications