இழுபறிக்கு பிறகு.. ஹைகோர்ட்டில் இன்று நேரில் ஆஜரானார் சென்னை போலீஸ் கமிஷனர் ஜார்ஜ்
நிலுவை வழக்குகள் குறித்து அறிக்கை தாக்கல் செய்யாத வழக்கில் இன்று ஹைகோர்ட் நீதிபதி வைத்தியநாதன் முன்பு சென்னை காவல் துறை கமிஷனர் ஜார்ஜ் ஆஜரானார்.
சென்னை: நிலுவையில் உள்ள மத்திய குற்றப்பிரிவு வழக்குகள் குறித்து அறிக்கை தாக்கல் செய்யாத வழக்கில் ஹைகோர்ட் நீதிபதி வைத்தியநாதன் முன்பு இன்று சென்னை கமிஷனர் ஜார்ஜ் ஆஜரானார்.
கடந்த 2016-ஆம் ஆண்டு ஒரு வழக்கின் ஜாமீன் மனுவின் மீதான விசாரணையின்போது மத்திய குற்றப்பிரிவில் 2011-ஆம் ஆண்டு வரை நிலுவையில் உள்ள வழக்குகள் குறித்தும், குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்படாத வழக்குகள் குறித்து அறிக்கை அளிக்க சென்னை ஹைகோர்ட் நீதிபதி வைத்தியநாதன் உத்தரவிட்டிருந்தார்.

நிலுவையில் உள்ள கொடுங்குற்ற வழக்குகளை 2 மாதங்களிலும் முடிக்கும்படி அனைத்து காவல் நிலையங்களுக்கு சுற்றறிக்கை அனுப்பவும், அந்த வழக்குகளின் நிலைகுறித்தும், குற்றம்சாட்டப்பட்டவர்களுக்கும், காவல் துறையில் உள்ள சிலருக்கும் உள்ள தொடர்பு குறித்தும் ஹைகோர்ட் பதிவாளருக்கு வரும் 4 வாரங்களுக்குள் அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என மாநகர கமிஷனர் ஜார்ஜுக்கு நீதிபதி உத்தரவிட்டிருந்தார்.
அவ்வாறு தவறும்பட்சத்தில் ஜார்ஜ் கோர்ட்டில் நேரில் ஆஜராகியோ, எழுத்துப்பூர்வமாகவோ விளக்கம் அளிக்க வேண்டும் என்ற நீதிபதியின் உத்தரவானது கடந்த டிசம்பர் மாதத்துடன் முடிவடைந்து விட்டது. இந்நிலையில் அறிக்கை தாக்கல் செய்யாத வழக்கில் கடந்த சில நாள்களுக்கு முன்னர் காவல்துறை ஆணையர் ஜார்ஜ் நேரில் ஆஜராக வேண்டும் என்று உத்தரவிட்டப்பட்டது.
ஆனால் அன்றைய தினம் ஜார்ஜ் ஆஜராகவில்லை. எனினும் நிலுவை மத்தியகுற்றப்பிரிவு வழக்குகள் பற்றி தாமதமாக ஜார்ஜ் சார்பில் அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது. நீதிமன்றத்தில் ஆஜராகாமல் அறிக்கையையும் தாமதமாக தாக்கல் செய்ததற்கு கண்டனம் தெரிவித்த நீதிபதி, ஆணையர் ஜார்ஜ் 27-ம் தேதிக்குள் கண்டிப்பாக ஆஜராக உத்தரவிட்டார்.
அதன்படி இன்று சென்னை ஹைகோர்ட் நீதிபதி வைத்தியநாதன் முன்பு காவல் துறை ஆணையர் ஜார்ஜ் ஆஜரானார். தாமதத்திற்கான காரணங்களை அறிக்கையாக தாக்கல் செய்தார். எனவே அடுத்த விசாரணைக்கு ஜார்ஜ் நேரில் ஆஜராவதில் இருந்து விலக்கு அளிக்கப்பட்டது.












Click it and Unblock the Notifications