மாஞ்சாநூல் தயாரிக்க தடை… மாஞ்சா நூலில் பட்டம் பறக்கவிட்டால் சிறை – சென்னை காவல்துறை உத்தரவு
சென்னை: மாஞ்சா நூல் விற்றாலோ, மாஞ்சா நூலில் பட்டம் செய்து விற்றாலோ 4 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டு கடும் நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்று சென்னை மாநகர காவல்துறை ஆணையர் ஜார்ஜ் கூறியுள்ளார்.
சென்னை பெரம்பூர் மேம்பாலத்தில் கடந்த 27ம் தேதி தந்தையுடன் மோட்டார் சைக்கிளில் சென்ற அஜய் என்ற 5 வயது சிறுவனின் கழுத்தை, வானில் பறந்து வந்த மாஞ்சா நூல், அறுத்தது. இதில், அவன் பரிதாபமாக உயிரிழந்தான். இதுகுறித்து பெரவளூர் போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.

இதுதொடர்பாக மாஞ்சா நூலில் பட்டம் விட்ட ராபர்ட், டேவிட், மாஞ்சா கயிறை தயார் செய்து கொடுத்த கடை உரிமையாளர்கள் பிரதீப், குமார் ஆகிய 4 பேர் கைது செய்யப்பட்டனர். கடை உரிமையாளர் முருகன் தப்பிவிட்டதாக போலீஸார் தெரிவித்தனர்.
இதுபோன்ற சம்பவங்கள் நடக்காமல் இருக்க தனிப்படைகள் அமைக்கப்பட்டு, சென்னை முழுவதும் சோதனை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இந்த நிலையில், கொரட்டூரில் உள்ள ஒரு வீட்டில் போலீஸார் சோதனையிட்டு, அங்கிருந்த மாஞ்சா கயிறு தயாரிக்கப் பயன்படும் இயந்திரம், அடுப்பு, ரசாயனக் கலவை, பாட்டில் சிதறல்கள் ஆகியவற்றை பறிமுதல் செய்தனர். மேலும், 85 பண்டல் மாஞ்சா நூல், 120 பண்டல் வெள்ளை மாஞ்சா நூல், மாஞ்சா நூல் தயாரிக்கப் பயன்படும் வஜ்ரம், கலர் பொடி, கண்ணாடி தூள் கந்தகம், துத்தநாகம் ஆகியவற்றையும் போலீஸார் பறிமுதல் செய்தனர். மேலும், சென்னை முழுவதும் மாஞ்சா நூல் தயாரித்தல், விற்பனை செய்தல், அதைப் பயன்டுத்தி பட்டம் விடுதல் போன்றவற்றில் ஈடுபட்டதாக 175 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இந்த நிலையில், இந்த வழக்கில் கைது செய்யப்பட்ட பிரதீப்,23, குமார் ,70 ஆகியோர் தங்களுக்கு ஜாமீன் வழங்கவேண்டும் என்று சென்னை மாவட்ட செசன்சு கோர்ட்டில் மனு தாக்கல் செய்தனர். இந்த மனு நீதிபதி ஆதிநாதன் முன்பு நேற்று விசாரணைக்கு வந்தது. பின்னர், மனுவுக்கு போலீஸ் தரப்பு பதிலளிக்க வேண்டும் என்று கூறி விசாரணையை இன்று தள்ளிவைத்து நீதிபதி உத்தரவிட்டார்.
சென்னையில் மஞ்சா நூலை பயன்படுத்தி காற்றாடி பறக்கவிட போலீசார் தடை விதித்துள்ளனர். மஞ்சா நூலுக்கு தடைவிதித்து சென்னை காவல் துறை ஆணையர் ஜார்ஜ் உத்தரவிட்டார். மீறுவோர் மீது கடுமையான சட்டப் பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்படும் என ஜார்ஜ் அறிவித்துள்ளார். மாஞ்சா நூல் விற்றாலோ, மாஞ்சா நூலில் பட்டம் செய்து விற்றாலோ 4 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டு கடும் நடவடிக்கைகள் எடுக்கப்படும். மாஞ்சா நூல் தொடர்பான புகார்களுக்காக 044 - 2561 5086 என்ற சிறப்பு எண் வசதியும் செய்யப்பட்டுள்ளதாக ஜார்ஜ் தெரிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications