சென்னை, காஞ்சி, திருவள்ளூர் மாவட்டங்களில் டிச.13 வரை பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை
சென்னை: மழை, வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ள சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர் மாவட்டங்களில் பராமரிப்பு பணிகளை மேற்கொள்ள வேண்டியிருப்பதால் டிசம்பர் 13ம் தேதிவரை பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவித்து மாவட்ட ஆட்சியர்கள் உத்தரவிட்டுள்ளனர்.
சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர் மாவட்டங்களில், கடந்த நவம்பர் 30ம் தேதி முதல் பிற்பகல் முதல் இடைவிடாது பெய்த கனமழையை தொடர்ந்து மீட்பு பணிகளும் நிவாரணங்களும் முழுவீச்சில் நடந்து வருகின்றன. நகரின் பல பகுதிகளில் குப்பைகளும், சேறும் சகதியும் நிறைந்துள்ளன. பல மாவட்டங்களில் இருந்தும் வந்துள்ள துப்புரவு பணியாளர்கள் இரவு பகலாக குப்கைகளை அகற்றி வருகின்றனர்.
வெள்ளத்தில் வீடுகளை இழந்த பலரும் பள்ளி, கல்லூரிகளில் தங்கியுள்ளனர். நிவாரண முகாம்களாக பள்ளிகள் செயல்படுகின்றன. எனவே வெள்ளம் வடிந்துள்ள பகுதிகளைச் சேர்ந்த மக்கள் படிப்படியாக தங்களின் இருப்பிடங்களுக்கு திரும்பி வருகின்றனர்.

டிசம்பர் 13 வரை விடுமுறை
மழையால் பாதிக்கப்பட்ட பள்ளி, கல்லூரி வளாகங்களை தூய்மைப்படுத்த வேண்டிய பணி உள்ளது. எனவே சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர் மாவட்டங்களில் உள்ள பள்ளி, கல்லூரிகளுக்கு டிசம்பர் 13ம் தேதிவரை விடுமுறை அறிவித்து அந்தந்த மாவட்ட ஆட்சியர்கள் உத்தரவிட்டுள்ளனர்

தேர்வுகள் ஒத்திவைப்பு
அண்ணா பல்கலைக்கழக தேர்வுகள் டிசம்பர் 14 வரை ஒத்திவைக்கப்பட்டுள்ளன. அம்பேத்கர் சட்டக் கல்லூரி தேர்வுகள் டிசம்பர் 13 வரை ஒத்திவைக்கப்பட்டுள்ளன. இதே போல் தன்னாட்சி அதிகாரம் கொண்ட கல்லூரிகளைத் தவிர, பிற கல்லூரிகளின் தேர்வுகளும் ஒத்திவைக்கப்படுவதாக பதிவாளர்கள் தெரிவித்துள்ளனர்.

தொடர் விடுமுறை
தொடர்மழை காரணமாக கடந்த நவம்பர் 9ம் தேதி முதல் 25ம் தேதிவரை சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம் மாவட்டங்களில் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை விடப்பட்டது. நவம்பர் 26ம் தேதி பள்ளிகள் திறக்கப்பட்டன. 3 நாட்கள் மட்டுமே பள்ளிகள் செயல்பட்ட நிலையில் நவம்பர் 30ம் தேதி முதல் விடுமுறை விடப்பட்டுள்ளது.

இதுவே முதல்முறை
மழை வெள்ளத்திற்காக தமிழகத்தில் ஒரு மாதம் வரை தொடர் விடுமுறை விடப்படுவது இதுவே முதன்முறையாகும். அரையாண்டு தேர்வுகள் ஜனவரி முதல் வாரத்திற்கு ஒத்திவைக்கப்பட்டதும் இதுவே முதன்முறையாகும்.












Click it and Unblock the Notifications