சென்னை: குடிபோதையில் இளம்பெண்ணிடம் சில்மிஷம்… டிராபிக் போலீஸை நைய புடைத்த பொது மக்கள்
சென்னை: குடிபோதையில் போலீசார் பணி புரிவதும் பெண்களிடம் தகாதமுறையில் நடந்து கொள்வதும் வாடிக்கையாகிவருகிறது. சமீபத்தில் திண்டுக்கல் அருகே பேருந்தில் குடிபோதையில் ஒரு சப் இன்ஸ்பெக்டர் பெண்ணிடம் தகாத முறையில் நடந்து கொண்ட வீடியோ வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது.
இந்த நிலையில் சனிக்கிழமையன்று சென்னை கோடம்பாக்கம் அருகே இளம் பெண்ணிடம் தகாத முறையில் நடக்க முயன்ற டிராபிக் போலீஸ் எஸ்.ஐயை பொதுமக்கள் சரமாரியாக அடித்து உதைத்தனர். இதைத் தொடர்ந்து சம்பந்தப்பட்ட எஸ்ஐ மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. அவர் விரைவில் பணி இடை நீக்கம் செய்யப்படுவார் என தெரிகிறது.
சென்னையை சேர்ந்த இளம்பெண் ஒருவர் கோடம்பாக்கத்தில் உள்ள தனியார் நிறுவனத்தில் பணிபுரிந்து வருகிறார். வழக்கம் போல் சனிக்கிழமை இரவு பணி முடிந்து 8.30 மணி அளவில் வீடு திரும்புவதற்காக கோடம்பாக்கம் நெடுஞ்சாலை அருகே நடந்து சென்றார்.

கோடம்பாக்கம் மேம்பாலம் அருகே சாலையை கடப்பதற்காக அங்கு நின்று கொண்டிருந்தார். அப்போது அங்கு பணியில் இருந்த போக்குவரத்து சிறப்பு எஸ்ஐ பன்னீர்செல்வம் என்பவர் அந்த இளம் பெண் சாலையை கடக்க உதவுவது போல் அவரது கையை பிடித்து இழுத்து சில்மிஷத்தில் ஈடுபட்டார்.
இதனால் அதிர்ச்சி அடைந்த அந்தப்பெண், பன்னீர்செல்வத்தை கண்டித்துள்ளார். ‘'சட்டத்தை கடைபிடிக்க வேண்டிய நீங்களே இப்படி தரக்குறைவாக நடந்து கொள்ளலாமா'' என்று கேட்டுள்ளார். அதற்கு அவர், அந்தப்பெண்ணை கிண்டல் செய்துள்ளார். மேலும், தரக்குறைவான வார்த்தைகளால் திட்டி உள்ளார். இதனால், மனமுடைந்த அவர், அழுது கொண்டே அருகில் இருந்த பள்ளிவாசலுக்கு சென்று தொழுகையில் ஈடுபட்டிருந்தவர்களிடம் நடந்த சம்பவத்தை கண்ணீர் வடித்தபடி கூறியுள்ளார்.
இதைக் கேட்டு அதிர்ச்சி அடைந்த அவர்கள் ஒன்று திரண்டு எஸ்ஐ பன்னீர்செல்வத்திடம் சென்று நடந்த சம்பவம் குறித்து கேட்டுள்ளனர். அவர்களையும் எஸ்ஐ உதாசினப்படுத்தி உள்ளார். இதனால் ஆத்திரம் அடைந்த அவர்கள், பன்னீர்செல்வம் மீது சரமாரியாக தாக்குதல் நடத்தினர். பன்னீர்செல்வம் மீது கடும் நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி கோடம்பாக்கம் நெடுஞ்சாலையில் மக்கள் திடீரென சாலைமறியலிலும் ஈடுபட்டனர்.
இதுகுறித்து போலீஸ் உயரதிகாரிகளுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. சம்பவ இடத்துக்கு வந்த அவர்கள் சாலை மறியலில் ஈடுப்பட்டிருந்தவர்களிடம் சமாதான பேச்சுவார்த்தை நடத்தினர். ‘இளம் பெண்ணிடம் தகாத முறையில் நடந்து கொண்ட எஸ்.ஐ. பன்னீர்செல்வத்தின் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும்' என உறுதியளித்ததை தொடர்ந்து சாலைமறியல் கைவிடப்பட்டது.
இதைத் தொடர்ந்து முதல்கட்டமாக பன்னீர் செல்வத்திடம் உயரதிகாரிகள் விசாரணை நடத்தி உள்ளனர். இதைத் தொடர்ந்து அவர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. இதனால், அவர் எந்த நேரத்திலும் கைது செய்யப்படலாம் என போலீஸ் வட்டாரத்தில் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது. இந்த சம்பவம் போலீஸ் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. சம்பந்தப்பட்ட எஸ்ஐ போதையில் இருந்ததாகவும் கூறப்படுகிறது.
சென்னையில் போக்குவரத்து போலீசாரின் அத்துமீறல் தொடர்ந்து வருகிறது. கடந்த சில வாரங்களுக்கு முன்னர் இரு சக்கர வாகனத்தில் சென்ற வாலிபர்களை போக்குவரத்து போலீசார் திடீரென வழி மறித்தனர். பயந்து போன வாலிபர்களில் ஒருவர் பைக்கில் இருந்து தடுமாறி சாலை தடுப்பில் விழுந்து பலியானார். இதைத் தொடர்ந்து சம்பந்தப்பட்ட போக்குவரத்து இன்ஸ்பெக்டருக்கு சரமாரி அடி விழுந்தது. இது ஒரு புறம் இருக்க, சாலையில் செல்லும் வாகன ஓட்டிகளுக்கு தேவை இல்லாத தொந்தரவு கொடுப்பதாகவும், பண வசூலில் ஈடுபட்டு வருவதாகவும் பொது மக்கள் புலம்பி வருகின்றனர். இந்நிலையில், இளம்பெண் ஒருவரிடம் சில்மிஷத்தில் ஈடுபட்ட போக்குவரத்து எஸ்ஐ ஒருவரை பொது மக்கள் அடித்து துவைத்து காயப்போட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
குடிபோதையில் வாகனம் ஓட்டினால் அபராதம் விதிப்பதோடு சிறையில் தள்ளும் போலீஸ் அதிகாரிகளே குடிபோதையில் இளம் பெண்களிடம் அத்துமீறுவது எந்த வகையில் நியாயம் என்று கேள்வி எழுப்பியுள்ளனர் சமூக ஆர்வலர்கள்.












Click it and Unblock the Notifications