லெக்கின்ஸ் போட தடை: போராட்டத்தில் குதித்த சாய்ராம் பொறியியல் கல்லூரி மாணவர்கள் கைது
சென்னை: சாய்ராம் கல்லூரியில் பயிலும் மாணவ, மாணவிகளுக்கு பல விதமான விதிமுறைகளை சாய்ராம் பொறியியல் கல்லூரி புகுத்துவதாக புகார் எழுந்தது. இந்த விதிமுறைகளை தளர்த்த கோரி அக்கல்லூரியின் மாணவ மாணவிகள் செவ்வாய்க் கிழமை போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
கல்லூரியை விட்டு வெளியோ வந்த மாணவர்கள் கண்களைக் கட்டிக்கொண்டு தங்களது எதிர்ப்பை வெளிப்படுத்தினர். சாலை மறியலிலும் ஈடுபட்டனர். மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட மாணவர்கள் 30 பேரை போலீசார் கைது செய்துள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கல்லூரியில் தடைகள்
லெகின்ஸ் போடக்கூடாது", "டி.ஷர்ட் போடக்கூடாது", "சுடிதார்ல ஷால் இரண்டு பக்கமும் பின் பண்ணியிருக்கணும்" என சாய்ராம் கல்லூரி நிர்வாக போட்டுள்ள ரூல்ஸ் பட்டியல் நீள்கிறது. ஆடையில் மட்டுமல்ல, இன்னும் பல விஷயங்களில் மாணவ, மாணவிகளுக்கு தடை உள்ளது.

செல்போனுக்கு தடை
இருசக்கர வாகனங்கள் கொண்டு வரக்கூடாது, செல்போன்கள் பயன்படுத்தக்கூடாது, கார்டியன்களைத் தவிர யாரும் மாணவர்களைப் பார்க்க ஹாஸ்டலுக்கு வரக்கூடாது, வாக்மேனில் பாடல் கேட்பதற்கு கல்லூரியிலும், கல்லூரிப் பேருந்திலும் தடை, கல்லூரியில் பிறந்த நாள் கொண்டாடக் கூடாது என மாணவர்கள் இயல்பாகச் செய்யும் அத்தனைக்கும் தடை. அதிலும் முக்கியமாக மாணவிகளும் மாணவர்களும் பேசிக்கொள்ளக் கூடாது என்பதுதான் மாணவர்களிடையே கொதிப்பை ஏற்படுத்தியுள்ளது.
|
மாணவர்களுக்கு அடி உதை
இவர்களின் விதிமுறைகளை மீறுவோருக்குக் கல்லூரிப் பேராசிரியர்கள் கடுமையான தண்டனைகளையும் தருகிறார்கள் என்பது மாணவர்களின் குற்றச்சாட்டு. மாணவர்களை அடித்து துன்புறுத்துவதாகவும் மாணவர்கள் தெரிவித்துள்ளனர். அசைவ உணவு சாப்பிடவும் தடை விதிக்கப்பட்டுள்ளதாம்.

நிர்வாகி சஸ்பெண்ட்
ஏற்கனவே 2010ம் ஆண்டு இந்தக் கல்லூரியின் நிர்வாகி ஒருவர் விதிமுறைகளைப் பின்பற்றாத காரணத்திற்காக மாணவர்களை அடித்திருக்கிறார். மாணவர்கள் இதனைக் கண்டித்து பெரிய அளவில் போராட்டம் நடத்தி அந்த நிர்வாகியை சஸ்பெண்ட் செய்ய வைத்தனர். 2004ம் ஆண்டில் இருந்து இந்த மாதிரியான கடுமையான நடவடிக்கைகளைப் பின்பற்றுகிறார்கள்.

மாணவிகளுக்கு ரூல்ஸ்
பெண்கள் ஷால் அணிந்து கொண்டு வருவது அவர்களுக்கு நல்லது. சென்னை மருத்துவக் கல்லூரியில் லெகின்சுக்குத் தடை விதித்தார்கள். அவர்களை யாரும் எதுவும் கேட்கவில்லை எங்கள் மேல் வேண்டுமென்றே பழி சுமத்துகிறார்கள். இதை இணையத்தில் பதிவிட்டவர்களைக் கண்டுபிடிக்க சைபர் செல்லில் புகார் அளிக்கப் போகிறோம்." என்கிறார். அக்கல்லூரியின் நிர்வாகி மாறன்

ஃபேஸ்புக் பயன்பாடு
எங்கள் கல்லூரி மாணவர்கள், சமூக வலைதளங்களை பயன்படுத்தக்கூடாது' என, நாங்கள் கூறியுள்ளதாக, சில சமூக வலைதளங்களில் கருத்துகள் பரவி வருகின்றன.அந்த கருத்துக்கும், எங்களுக்கும் எந்தசம்பந்தமும் இல்லை. எங்கள் கல்லூரிக்கென்றே தனி, 'பேஸ்புக்' பக்கம் உள்ளது.அதை, பல்லாயிரம் மாணவ, மாணவியர் பின்பற்றி வருகின்றனர். நாங்கள் மாணவ, மாணவியருக்கு சுதந்திரம்; கல்வித்தரம் இரண்டையும் வழங்கி வருகிறோம் என்கின்றனர் ஸ்ரீ சாய்ராம் பொறியியல் கல்லூரியின் முதன்மை செயல் அதிகாரி சாய்பிரகாஷ் லியோ முத்து, முதல்வர் ஜெயக்குமார் ஆகியோர்.

ஆடை கட்டுப்பாடு
அண்ணா பல்கலைக்கழகம், மாணவ, மாணவியருக்காக வகுத்து கொடுத்துள்ள விதிமுறைகள், எங்கள் கல்லூரியிலும் பின்பற்றப்படுகின்றன. அதன்படி, எங்கள் கல்லூரியில் மொபைல் போன், 'லெக்கின்ஸ்' ஆடைக்கு அனுமதி கிடையாது.கல்லூரி நேரத்தில் மொபைல் போன் பயன்படுத்தினால், 2,000 ரூபாயை, ஆதரவற்றோர் இல்லத்தில் நன்கொடையாக தந்து, அதன் ரசீது காட்டினால் மட்டுமே, மொபைல் போன் திருப்பித் தரப்படுகிறது.

அசைவ உணவு
கல்லூரி அருகே வனப்பகுதி இருப்பதால், கல்லூரி வளாகத்தில், அசைவ உணவுகளை கண்டபடி வீசி எறிய வேண்டாம் என, அறிவுறுத்தியுள்ளோம்; அசைவ உணவு சாப்பிட தடை ஏதும் விதிக்கவில்லை. கல்லூரிக்கு அவப்பெயர் உருவாக்கவே, மாணவர்களை தூண்டும் படி, சிலர் இத்தகைய செயலில் இறங்கி உள்ளனர் என்பதும் நிர்வாகத்தின் புகாராக உள்ளது.












Click it and Unblock the Notifications