இன்னும் மிதக்கும் சென்னை புறநகர்கள்.. கடும் ஆத்திரத்தில் மக்கள்!
சென்னையில் கடந்த 2 நாட்களுக்கு முன்னர் பெய்த மழையே புறநகர்ப் பகுதிகளில் வீடுகளை தண்ணீர் சூழ்ந்து உள்ளது. 2 நாட்களாகியும் மழை நீர் வடியாமல் இரவு முழுவதும் திகிலுடனே கழித்துள்ளனர் மக்கள்.
Recommended Video

சென்னை: 2 நாள் மழைக்கே சென்னை புறநகர்ப் பகுதிகள் மிதப்பதால் குரோம்பேட்டை, தாம்பரம், ஓட்டேரி, அயனாவரம் உள்ளிட்ட பகுதி மக்கள் கடும் அவதிக்கு ஆளாகியுள்ளனர். நீர் சூழ்ந்திருப்பதால் மக்கள் வீடுகளை விட்டு வெளியேறி உறவினர்கள் வீட்டில் தங்கியுள்ளனர்.
வடகிழக்குப் பருவமழையை எதிர்கொள்ள அரசுத் தயார் நிலையில் இருப்பதாக அதிகாரிகள் தெரிவித்தனர். ஆனால் 2 நாள் மழைக்கே சென்னை புறநகர்ப் பகுதிகள் தண்ணீரில் தத்தளிக்கின்றன. நேற்று முன்தினம் சென்னையில் சராசரிக்கு குறைவான அளவிலேயே மழை பெய்துள்ளது. எனினும் சென்னை புறநகர்ப் பகுதிகளான தாம்பரம், முடிச்சூர், ஊரப்பாக்கம், குரோம்பேட்டை, வேளச்சேரி, மடிப்பாக்கம் உள்ளிட்ட இடங்களில் தாழ்வான பகுதிகளில் குடியிருப்புகளை சுற்றி மழை நீர் சூழ்ந்துள்ளது.
இதே போன்று வடசென்னை பகுதிகளான பெரம்பூர், கொரட்டூர், ஓட்டேரி, வியாசர்பாடி, அயனாவரம் உள்ளிட்ட பகுதிகளிலும் குடியிருப்புகளை வெள்ள நீர் சூழ்ந்துள்ளது. தொடக்க கால மழையை சமாளிக்க முடியாமல் சென்னையில் பல முக்கிய இடங்கள் வெள்ள நீரில் மிதக்கிறது. 48 மணி நேரமாகியும் இந்த தண்ணீரை வெளியேற்ற வழி தெரியாமல் திண்டாடி வருகின்றனர் மக்கள்.

கழிவு நீர் கலந்து
இதே போன்று மழை நீர் குடியிருப்புகளை சூழ்ந்து இருப்பதால் கொசு உற்பத்தி அதிகரித்துள்ளதோடு, கழிவு நீரும் வெள்ள நீரில் கலப்பதால் நோய் தொற்று பாதிப்பு இருப்பதாக மக்கள் அஞ்சுகின்றனர். வெள்ள நீரில் விஷ ஜந்துக்கள் நடமாட்டமும் இருப்பதால் குழந்தைகளை வைத்துக் கொண்டு சென்னைப் புறநகர்ப் பகுதி மக்கள் இரவை திகிலுடன் கழித்துள்ளனர்.

மூழ்கிய சுரங்கப் பாதைகள்
சாலை மற்றும் சுரங்கப் பாதைகளில் தேங்கிய மழைநீர் மட்டுமே அகற்றப்பட்டுள்ளன. சென்னை மாநகராட்சி பகுதியில் இன்னும் 13 இடங்களில் மழை நீர் அகற்றப்படாமல் உள்ளன. மாநகராட்சி புகார் எண்களுக்கு புகார் அளித்தாலும் அதனால் எந்தப் பயனும் இல்லை என்று பொதுமக்கள் கொந்தளிக்கின்றனர்.

கால்வாய்களில் குப்பைகள்
ஒருபுறம் வெள்ள நீர் சூழ்ந்து மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ள நிலையில் பல இடங்களில் குப்பைகள் நீர் செல்லும் பாதைகளை அடைத்துக் கொண்டு உள்ளதாலும் மழைநீர் வெளியே செல்ல முடியாமல் தேங்கி நிற்கிறது. இதே போன்று சில இடங்களில் கால்வாய்களும் கழிவு மற்றும் மண் அடைப்பால் துர்ந்துள்ளது. இதனால் வீடுகளை விட்டே வெளியேற முடியாமல் குழந்தைகள், முதியோர்களுடன் மக்கள் வீடுகளிலேயே முடங்கிக் கிடக்கின்றனர்.

மேலும் மோசமடையும்
புறநகரில் மிகவும் மோசமான நிலையில் உள்ள இடங்களில் வசிக்கவே முடியாமல் பலர் வீடுகளை விட்டு வெளியேறி உறவினர்கள், நண்பர்கள் வீடுகளில் வசித்து வருகின்றனர். இந்நிலையில் இன்று காலை முதல் சென்னையில் மழை மேகங்கள் மிரட்டி வருவதால் மீண்டும் மழை வந்தால் தங்களின் நிலைமை மேலும் மோசமடையும் என்று கவலையில் உள்ளனர் மக்கள்.












Click it and Unblock the Notifications