மூளைச்சாவு அடைந்த பெண்ணின் இதயம் தானம்: இரவில் பறந்த இதயம்
சென்னை: சென்னையில் மூளைச்சாவு அடைந்த பெண்ணின் இதயம் முதியவர் ஒருவருக்கு தானம் செய்யப்பட்டது.
சென்னை பெரும்பாக்கத்தில் உள்ள குளோபல் மருத்துவமனையில் சாலை விபத்தில் காயம் அடைந்து மெகருன்னிசா (38) என்ற பெண் அனுமதிக்கப்பட்டு இருந்தார். அவருக்கு மூளைச் சாவு ஏற்பட்டதாக டாக்டர்கள் அறிவித்தனர். இதையடுத்து அவரது உடல் உறுப்புகளை தானம் செய்ய உறவினர்கள் முன் வந்தனர்.
ஆயிரம் விளக்கு பகுதியில் உள்ள அப்பல்லோ மருத்துவமனையில் இதயம் பழுதடைந்து உயிருக்கு போராடிய ஒரு முதியவருக்கு மெகருன்னிசாவின் இதயத்தை பொருத்த முடிவு செய்யப்பட்டது.
இதற்காக டாக்டர்கள் குழுவினர் மெகருன்னிசாவின் உடலில் இருந்து இதயத்தை பிரித்து எடுத்தனர். அந்த இதயத்தை விரைவாக கொண்டு செல்ல போக்குவரத்து போலீசாரின் உதவி கோரப்பட்டது.
போக்குவரத்து போலீஸ் துணை கமிஷனர் சிவானந்தம் தலைமையில் பெரும்பாக்கத்தில் இருந்து கிரீம்ஸ் ரோடு வரை போக்குவரத்து ஒழுங்குபடுத்தப்பட்டது.
மொத்தம் 24 கிலோ மீட்டர் தூரம் உள்ள இந்த பாதையில் 16 சந்திப்பு சிக்னல்கள் உள்ளன. ஒவ்வொரு சந்திப்பிலும் 3 போலீசார் வீதம் நிறுத்தப்பட்டனர்.
இரவு 9.30 மணிக்கு இதயம் ஆம்புலன்சில் ஏற்றப்பட்டது. சரியாக 23 நிமிடத்தில் அந்த ஆம்புலன்ஸ் கிரீம்ஸ் ரோட்டுக்கு வந்து சேர்ந்தது.
அதை தொடர்ந்து அந்த இதயம் முதியவருக்கு வெற்றிகரமாக பொருத்தப்பட்டது.












Click it and Unblock the Notifications