சென்னையில் பயங்கரம்... தங்க, வைர நகைகளுக்காக எல்.ஐ.சி. பெண் ஏஜெண்ட் கொலை
சென்னை: சென்னையில் தனிமையில் வீட்டில் இருந்த வயதான எல்.ஐ.சி. பெண் ஏஜெண்ட் நகைகளுக்காக கொலை செய்யப்பட்டுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இரண்டு நாட்களுக்குப் பிறகு அவரது உடல் அழுகிய நிலையில் அடுக்குமாடிக் குடியிருப்பில் இருந்து மீட்கப்பட்டுள்ளது.
சென்னை எம்.ஜி.ஆர். நகர், ஜாபர்கான்பேட்டை, கங்காநகர், அருள்சோழன் அடுக்குமாடி குடியிருப்பில் வசித்து வந்தவர் விசாலாட்சி (63). கடந்த 15 ஆண்டுகளுக்கு முன்பே கணவர் பிரிந்து சென்று விட குழந்தைகளும் இல்லாததால், விசாலாட்சி தனிமையில் வசித்து வந்துள்ளார்.
எல்.ஐ.சி. ஏஜெண்டான விசாலாட்சியைப் பார்க்க தினந்தோறும் நிறைய பேர் அவரது வீட்டிற்கு வருவது வழக்கமாம். இந்நிலையில் கடந்த திங்கள் முதல் விசாலாட்சியின் வீடு வெளிப்புறமாக பூட்டப்பட்டிருந்துள்ளது.
எல்.ஐ.சி. பணத்தை வசூல் செய்ய வெளியூர் சென்றிருப்பார் என நினைத்த அக்கம்பக்கதார், வீட்டு வாசலில் கிடந்த விசாலாட்சியின் செறுப்பு மற்றும் கார் பார்க்கிங்கில் நிறுத்தப்பட்டிருந்த அவரது இருசக்கர வாகனத்தால் சற்று குழப்பமடைந்தனர்.
இந்நிலையில், நேற்று காலை முதல் விசாலாட்சியின் வீட்டிலிருந்து துர்நாற்றம் வந்துள்ளது. இது தொடர்பாக அக்கம்பக்கத்தார் அளித்த தகவலின் அடிப்படையில் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார், வீட்டின் பூட்டை உடைத்து உள்ளே சென்றனர்.
அங்கே, கழிவறைக்குள் விசாலாட்சி மல்லாந்த நிலையில் பிணமாக கிடந்துள்ளார். அவரது பிணம் அழுகிய நிலையில் மீட்கப்பட்டுள்ளதால், திங்கட்கிழமை பகலிலேயே அவர் கொலை செய்யப்பட்டிருக்க வேண்டும் என போலீசார் சந்தேகிக்கின்றனர்.
ராயப்பேட்டை அரசு மருத்துவமனைக்கு விசாலாட்சியின் சடலம் பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைக்கப்பட்டது. அவர் அணிந்திருந்த வைர கம்மல், வைர மோதிரம், கழுத்து சங்கிலி, கைவளையல்கள் போன்ற நகைகள் கொள்ளை அடிக்கப்பட்டு இருந்தது.
இந்தப் படுகொலை தொடர்பாக உதவி கமிஷனர் ஆறுமுகம் செய்தியாளர்களிடம் கூறியதாவது:-
வெளிக்காயங்கள் இல்லை...
விசாலாட்சியின் உடம்பில் வெளிக்காயங்கள் எதுவும் இல்லை. அவர் கழுத்தை நெரித்து கொலை செய்யப்பட்டிருக்க வேண்டும். நகைகள் எவ்வளவு கொள்ளைபோனது என்பது பற்றி சரியான தகவல் இல்லை.
தனிமையில் வாழ்ந்த மூதாட்டி...
கொலை நடந்த அடுக்குமாடி குடியிருப்பு தரைதளம் மற்றும் 3 மாடிகளை கொண்டது. அங்கு 56 வீடுகள் உள்ளன. குடியிருப்புவாசிகளிடையே ஒற்றுமை இல்லாத காரணத்தால், அந்த குடியிருப்பில் கண்காணிப்பு கேமரா பொருத்தப்படவில்லை. விசாலாட்சியும் தான் தனியாக வாழ்வது பற்றி போலீசுக்கு தெரிவிக்கவில்லை.
தனித்தனி காவலாளிகள்...
பகலிலும், இரவிலும் தனித்தனி காவலாளிகள் உள்ளனர். இரவு காவலாளி விடுமுறையில் உள்ளார். பகல் காவலாளியிடம் விசாரணை நடத்தினோம். வேலைக்கார பெண்ணிடம் விசாரித்தோம்.
கொலையாளிகள்...
திங்கட்கிழமை பகலில், விசாலாட்சி வீட்டுக்கு 2 ஆண்கள் வந்து, அவரிடம் நீண்டநேரம் பேசிக்கொண்டு இருந்துள்ளனர். அந்த நபர்கள் விசாலாட்சிக்கு தெரிந்த நபர்களாக இருக்க வேண்டும். அவர்கள்தான் கொலையாளிகளாக இருக்கவேண்டும். கொலை நடந்த வீட்டுக்குள் ஒரு கைரேகை சிக்கி உள்ளது. விசாலாட்சியின் செல்போன், அவரது டைரி ஆகியவற்றை கைப்பற்றி விசாரித்து வருகிறோம்.
கைது செய்வோம்...
கொலையாளிகள், காரியத்தை முடித்துவிட்டு, அவர்கள் கையோடு கொண்டு வந்த பூட்டை போட்டு, கொலை நடந்த வீட்டு கதவை வெளியில் பூட்டிச்சென்று இருக்கிறார்கள். எனவே, அவர்கள் கொலை திட்டம் போட்டு வந்திருக்க வேண்டும்.
விரைவில் கைது...
கொலையாளிகள் பற்றி சில தடயங்களும், தகவல்களும் கிடைத்துள்ளன. குறிப்பிட்ட ஒரு நபர் மீது சந்தேகம் உள்ளது. கொலையாளிகள் ஒரு சில நாளில் கைது செய்யப்படுவார்கள்' என இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.
பரபரப்பு...
கொலையாளிகளை பிடிக்க 3 தனிப்படைகள் களத்தில் இறக்கப்பட்டுள்ளன. விசாலாட்சி கொலை செய்யப்பட்ட சம்பவம், ஜாபர்கான்பேட்டை பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.












Click it and Unblock the Notifications