தோசைக்கு மாவாட்டியபோது கிரைண்டரில் துப்பட்டா சிக்கி பெண் பரிதாப பலி
சென்னை: வெட் கிரைண்டரில் தோசைக்கு மாவாட்டியபோது துப்பட்டா கிரைண்டரில் சிக்கிக் கொண்டதால் இளம் பெண் பரிதாபமாக உயிரழந்துள்ளார். சென்னையில் இந்த விபரீதம் நடந்துள்ளது.
அந்தப் பெண்ணின் பெயர் ஹெப்சிபா. 24 வயதான இவரும், இவரது தாயார் முத்துலட்சுமியும், அரும்பாக்கம் ரஸ்ஸாக் கார்டன் சாலையில் உள்ள ஒரு உணவகத்தில் வேலை பார்த்து வருகிறார். நேற்று மாலை தனது தாயார் முத்துலட்சுமியுடன் அவர் இட்லிக்கு மாவாட்டும் பணியில் ஈடுபட்டிருந்தார். அப்போது கிரைண்டரில் திடீரென ஹெப்சிபாவின் துப்பட்டா சிக்கிக் கொண்டது. கிரைண்டர் வேகமாக சுற்றியதால் துப்பட்டாவும் வேகமாக சுற்றி ஹெப்சிபாவின் கழுத்தை நெறுக்கி விட்டது.
மின்னல் வேகத்தில் நடந்த இந்த விபரீதத்தில் ஹெப்சிபா சம்பவ இடத்திலேயே மரணமடைந்தார். அவரது தாயார் இந்தக் காட்சியைப் பார்த்து அலறவே அனைவரும் ஓடி வந்தனர். ஹெப்சிபாவை தூக்கிக் கொண்டு அருகில் இருந்த தனியார் மருத்துவமனைக்கு ஓடினர். ஆனால் அவர் ஏற்கனவே கழுத்து இறுகி இறந்து விட்டதாக டாக்டர்கள் தெரிவித்தனர்.
பின்னர் உடல் கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டது. அமைந்தகரை போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
ஹெப்சிபாவுக்கு கடந்த 3 வருடத்துக்கு முன்புதான் திருமணமானது. அவருக்குக் குழந்தை எதுவும் இல்லை. மதுரவாயலில் வசித்து வந்தார். ஹெப்சிபாவுடன் அவரது தாயாரும் வசித்து வந்தார். இருவரும் வீட்டுப் பொருளாதாரம் சரியில்லாததால், 3 மாதங்களுக்கு முன்புதான் இந்த கேன்டீனில் வேலைக்குச் சேர்ந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.