ஆசைக்கு இணங்காத அருணா… கழுத்தை நெரித்து கொன்ற தினேஷ்
சென்னை: சென்னை அடுக்குமாடி குடியிருப்பில் வீட்டில் யாருமில்லாத நேரத்தில் ஆசையாய் கூப்பிட்டு பேசிக்கொண்டிருந்த காதலன் தினேஷ் தனது காதலி அருணாவின் கழுத்தை நெரித்து கொன்றது அம்பலமாகியுள்ளது.
சென்னை தலைமை செயலக காலனி வி.ஜி. அப்பார்ட்மென்டில் உள்ள 2வது மாடியில் வசிப்பவர் கண்ணப்பன். ஓய்வு பெற்ற மத்திய அரசு ஊழியர். இவரது மனைவி ஜமுனா. இவர்களது மகள்கள் உமா, அஸ்வினி. மகன் தினேஷ் (25). தினேஷ் அம்பத்தூரில் உள்ள தனியார் வங்கியில் அதிகாரியாக பணிபுரிந்து வருகிறார்.
கடந்த சில நாட்களாக உடல்நல கோளாறால் அவதிப்பட்டு வந்த தினேசின் தந்தை கண்ணப்பன், தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். மனைவி உடனிருந்து அவரை கவனித்து வருகிறார்.
இதனால் தினேஷ் மட்டும் அடுக்குமாடி குடியிருப்பில் 2-வது மாடியில் தனியாக வசித்து வந்தார். திங்கட்கிழமையன்று 10.30 மணி அளவில் தினேஷ் போர்வை மற்றும் மெத்தையால் சுற்றி கட்டப்பட்ட மூட்டை ஒன்றை லிப்ட் மூலமாக இறக்கி கீழே கொண்டு வந்தார். அதனை தனது காரில் ஏற்றுவதற்காக முயற்சி செய்தார். லிப்ட் மூலமாக மூட்டையை கீழ் தளத்துக்கு கொண்டு வந்து விட்ட அவரால், காரில் ஏற்ற முடியவில்லை.
இதனால் பக்கத்து வீட்டுக்காரரை துணைக்கு அழைத்தார். மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருக்கும் தனது தந்தைக்கு பெட்ஷீட் மற்றும் துணிகளுடன் மெத்தையும் தேவைப்படுவதாகவும் அதை மூட்டை கட்டி இருப்பதாகவும் அவரிடம் கூறினார். பக்கத்து வீட்டுக்காரர் மூட்டையை தூக்க உதவியபோது துணி மூட்டையில் இருந்து ஒரு கை மட்டும் வெளியே நீட்டிக் கொண்டிருப்பதை பார்த்து உதவிக்கு வந்தவர் பயத்தில் கூச்சல் போட்டார்.
இதனால் அக்கம் பக்கத்தில் இருந்தவர்கள் அங்கு திரண்டு விட்டனர். இதனால் பயந்து போன தினேஷ் நைசாக நழுவி தனது மோட்டார் சைக்கிளில் மின்னல் வேகத்தில் அங்கிருந்து சென்று விட்டார். தகவலறிந்த போலீஸார் விரைந்து சென்று மூட்டையிலிருந்த பெண்ணின் பிரேதத்தை கைப்பற்றி கீழ்பாக்கம் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தார்.
கொலையுண்ட பெண் யார்? என்று போலீஸார் விசாரணை நடத்தினர். இதற்கிடையே திங்கட்கிழமை இரவு 11 மணி அளவில் சீனிவாசன் என்பவர் வேப்பேரி காவல் நிலையத்தில் தனது மகள் அருணாவை காணவில்லை என்று புகார் செய்தார்.
அப்போது அங்கிருந்த போலீசார், அருகில் ஒரு பெண் கொலை செய்யப்பட்டது குறித்து கூறியுள்ளார். இதனை தொடந்து கீழ்பாக்கம் மருத்துவமனைக்கு சென்ற சீனிவாசன் கொலைசெய்யப்பட்டது தனது மகள் என்பதை உறுதி செய்தார்.
பி.காம் பட்டதாரியான அருணாவும், தினேசும் நீண்ட நாட்களாக காதலித்து வந்துள்ளனர். அடிக்கடி தனிமையிலும் சந்தித்து பேசி இருக்கிறார்கள். இந்நிலையில் தினேஷ், திங்களன்று மாலையில் அருணாவுக்கு போன் செய்து, அழைத்து அவரை கொலை செய்துள்ளார். கொல்லப்பட்ட அருணாவின் உடல் பிரேத பரிசோதனை முடிந்து அவரது உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது. பிரேத பரிசோதனையில், தினேஷ், அருணாவை கழுத்தை நெரித்து கொலை செய்திருப்பது தெரிய வந்துள்ளது.
கழுத்தை நெரித்து
தினேசிடம் இருந்து தப்பி உயிர் பிழைப்பதற்காக அருணா கடுமையாக போராடி இருக்கிறார். அப்போது தினேஷ் அவரை கீழே தள்ளி கழுத்தை நெரித்து கொன்றுள்ளார்.
பலாத்கார முயற்சி
அருணாவின் முகத்தில் பல இடங்களில் நககீறல்களும் இருந்துள்ளன. இதை வைத்து பார்க்கும் போது, தினேஷ், அருணாவை பாலியல் பலாத்காரம் செய்ய முயன்றிருக்கலாமோ? என்கிற சந்தேகம் வலுப்பெற்றுள்ளது. ஆனாலும் பிரேத பரிசோதனை அறிக்கையின் முழு விவரங்களும் தெரிந்த பின்னர்தான் அதுபற்றி கூற முடியும் என்று போலீசார் தெரிவித்துள்ளனர்.
அடுக்குமாடி குடியிருப்பில்
திங்கட்கிழமை மாலை 5 மணிக்கு காதலி அருணாவை தினேஷ் அடுக்குமாடி குடியிருப்புக்கு அழைத்து வந்துள்ளார். இதன் பின்னர் 6.30 மணிக்கு தனது தாய் குமுதாவிடம் பேசிய அருணா, வீட்டுக்கு விரைவில் வந்து விடுவேன் என்று கூறியுள்ளார். இதுவே அவர் பேசிய கடைசி பேச்சு.
கடைசி நிமிடங்கள்
சில நிமிடங்களில் அருணாவின் செல்போன் ‘‘சுவிட்ச் ஆப்'' செய்யப்பட்டு விட்டது. இதன் பின்னரே (6.30 மணியில் இருந்து 8.30 மணி வரை) அருணா கொலை செய்யப்பட்டிருக்கிறார்.
மூட்டை கட்டி
இரவு 8.30 மணிக்கு அருணாவின் உடலை மூட்டை கட்டி கீழே கொண்டு வந்த தினேஷ், அதனை தூக்கி காரில் வைப்பதற்காக அருகில் இருந்தவர்களின் உதவியை நாடியுள்ளார். ரத்தக்கரை படிந்த கை காட்டிக்கொடுத்துவிட்டது.
இதனையடுத்துதான் அருணா கொலை செய்யப்பட்டது தெரிய வந்தது. 9 மணிக்கு குடியிருப்புவாசிகள் போலீசுக்கு தகவல் தெரிவித்தனர்.
தாயை சந்தித்த தினேஷ்
இதையடுத்து அங்கிருந்து தப்பிச்சென்ற தினேஷ், இரவு 11 மணி அளவில் தனது தாயை பார்த்து விட்டு செல்போனையும் அவரிடம் கொடுத்து விட்டு தப்பிச்சென்றதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. தப்பியோடிய தினேஷை பிடிக்க தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications