போராட்டத்தில் ஈடுபட்ட மாணவர்களை தாக்குவதா.. கண்டித்து சென்னையில் பொதுமக்கள் சாலை மறியல்
ஜல்லிக்கட்டுக்கு ஆதரவான போராட்டத்தில் ஈடுபட்ட மாணவர்கள் மீது தடியடி நடத்திய போலீசாரை கண்டித்து சென்னையில் பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டுள்ளனர்.
சென்னை: போராட்டத்தில் ஈடுபட்ட மாணவர்கள் மீது தடியடி நடத்துவதா என்று கொந்தளித்த பொதுமக்கள் சென்னையின் பல்வேறு இடங்களில் சாலை மறியலில் ஈடுபட்டுள்ளனர்.
ஜல்லிக்கட்டுக்கு நிரந்தர சட்டம் கோரி உறுதியான போராட்டத்தை தமிழகம் முழுவதும் மாணவ, மாணவிகள், இளைஞர்கள் நடத்தி வந்தனர். அவர்கள் அனைவரையும் குண்டுக்கட்டாக தூக்கியும், தடியடி நடத்தியும் போலீசார் அப்புறப்படுத்தி வருகின்றனர்.

குறிப்பாக சென்னை மெரினாவில் போராட்டத்தில் ஈடுபட்ட மாணவர்கள் மீது தடியடி மற்றும் கல்வீச்சை போலீசார் நடத்தினார்கள். இதனால் சென்னையில் உள்ள பொதுமக்கள் வெகுண்டெழுந்து சாலை மறியலில் ஈடுபட்டுள்ளனர். அறவழியில் அமைதியாக போராட்டம் நடத்தி வந்த மாணவர்கள் மீது எப்படி தடியடி நடத்தலாம் என்று கேள்வி கேட்டு பொதுமக்கள் தன்னெழுச்சியாக ஆங்காங்கே சாலை மறியலில் ஈடுபட்டுள்ளனர்.
சென்னையில் கோடம்பாக்கம், கீழ்பாக்கம் உள்ளிட்ட பகுதிகளில் பொதுமக்கள் சாலையில் அமர்ந்து போராட்டம் நடத்தி வருகின்றனர். அதே போன்று தரமணியில் டைடல் பார்க் முதல் சோழிங்கநல்லூர் வரை ஆங்காங்கே சாலை மறியலில் மக்கள் ஈடுபட்டு வருகின்றனர். இதனால் இந்த சாலையில் கடுமையாக போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது.
மேலும், திருவொற்றியூர், எண்ணூர் ஆகிய பகுதிகளிலும் பொதுமக்கள் சாலையில் அமர்ந்து போராட்டம் நடத்தி வருகின்றனர். இதனையடுத்து, இந்தப் பகுதிகளில் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளதோடு, பதற்றமும் நிலவி வருகிறது.












Click it and Unblock the Notifications