தற்கொலை செய்து கொண்ட பள்ளி மாணவிகளின் குடும்பங்களுக்கு ரூ.2 லட்சம் இழப்பீடு.. முதல்வர் அறிவிப்பு!
வேலூர் அருகே தற்கொலை செய்து கொண்ட பள்ளி மாணவிகள் 4 பேரின் குடும்பங்களுக்கு முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி 2 லட்சம் ரூபாய் இழப்பீடு அறிவித்துள்ளார்.
சென்னை: வேலூர் அருகே தற்கொலை செய்து கொண்ட பள்ளி மாணவிகள் 4 பேரின் குடும்பங்களுக்கு முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி 2 லட்சம் ரூபாய் இழப்பீடு அறிவித்துள்ளார்.
வேலூர் மாவட்டம் பணப்பாக்கம் அரசு பள்ளியில் 11-ம் வகுப்பு படித்து வரும் தீபா, சங்கரி, மணீஷா, ரேவதி ஆகிய நான்கு மாணவிகள் கடந்த 24ஆம் தேதி ராமாவரத்தில் உள்ள 60 அடி ஆழ கிணற்றில் குதித்து தற்கொலை செய்துகொண்டனர்.
மாணவிகள் தற்கொலைக்கு ஆசிரியைகள் லில்லி மற்றும் சிவக்குமாரியே காரணம் என சக மாணவிகள் இன்று புகார் அளித்தனர். இதையடுத்து மாணவிகளிடம் முதன்மை கல்லி அலுவலர் மார்ஸ் விசாரணை நடத்தினார்.
பள்ளி மாணவிகள் புகாரின்பேரில் பணப்பாக்கம் பள்ளியில் தற்காலிக ஆசிரியைகளாக பணியாற்றி வந்த லில்லி மற்றும் சிவக்குமாரியை பெற்றோர் ஆசிரியர் கழகம் இன்று பணி நீக்கம் செய்தது.
இந்நிலையில் தற்கொலை செய்து கொண்ட மாணவிகள் 4 பேரின் குடும்பங்களுக்கும் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி தலா 2 லட்சம் ரூபாய் இழப்பீடு அறிவித்துள்ளார். உயிரிழந்த மாணவிகளின் குடும்பங்களுக்கும் முதல்வர் இரங்கல் தெரிவித்துள்ளார்.
மேலும் மாணவிகள் உயிரிழந்த விவகாரம் தொடர்பாக உரிய விசாரணை நடத்த வேண்டும் என்றும் வேலூர் மாவட்ட ஆட்சியருக்கு முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி உத்தரவிட்டுள்ளார்.