ஜெ. மரணத்தில் மர்மம் இல்லை.. 100 சதவீத வீடியோ ஆதாரங்கள் எங்களிடம் உள்ளது: ஜெயானந்த்
சென்னை: முதல்வர் எடப்பாடி பழனிசாமி விருப்பப்பட்டால் ஜெயலலிதா மரணம் தொடர்பான நீதி விசாரணைக்கு உத்தரவிடலாம், 100 சதவீத வீடியோ ஆதாரங்கள் உள்ளன என்று திவாகரனின் மகன் ஜெயானந்த் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து தொலைக்காட்சி சேனலுக்கு அளித்த பேட்டியில் ஜெயானந்த் கூறியதாவது: எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அணி சசிகலாவிடம் மன்னிப்பு கோர வேண்டும். நாங்கள் கேட்க தேவையில்லை.
பணம் கொடுத்து மேலூர் பொதுக்கூட்டத்தை நாங்கள் கூட்டவில்லை. ஜெயலலிதா மரணம் குறித்து நீதிவிசாரணைக்கு உத்தரவிட்டால் நீதிபதியிடம் ஆதாரங்களை சமர்ப்பிப்போம்.
எய்ம்ஸ் மருத்துவர்கள் ஜெயலலிதா உடல்நிலையை பரிசோதித்தார்கள், எனவே அவர்களிடமும் விசாரணை நடைபெறும். அப்போது பன்னீர்செல்வம்தான் முதல்வர் பொறுப்புகளை கவனித்து வந்தார் என்பதால் அவரிடமும் விசாரணை நடைபெறட்டும். எங்களை பொறுத்தளவில் ஜெயலலிதா சிகிச்சை தொடர்பான 100 சதவீத வீடியோ ஆதாரங்கள் உள்ளன.
நான் கழக துணை பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் பங்கேற்ற மேலூர் கூட்டத்தில் முதல் வரிசையில் அமர்ந்திருந்ததாக புகார் கூறுவதை விட்டுவிட்டு, தொகுதி மக்களின் நலனில் ஆளும் கட்சி எம்எல்ஏக்கள் கவனம் செலுத்த வேண்டும். இவ்வாறு ஜெயானந்த் தெரிவித்தார்.