குவைத்தில் சிக்கித் தவிக்கும் 10 மீனவர்கள் தாயகம் திரும்ப நடவடிக்கை தேவை: மோடிக்கு ஜெயலலிதா கடிதம்
சென்னை: கன்னியாகுமரி மாவட்டத்தில் இருந்து குவைத்துக்கு வேலைக்காக அழைத்துச் செல்லப்பட்டு அங்கு பொய் வழக்கில் கைது செய்யப்பட்டு சிறை வைக்கப்பட்டிருக்கும் 10 மீனவர்கள் உடனடியாக தாயகம் திரும்ப நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பிரதமர் நரேந்திர மோடிக்கு முதல்வர் ஜெயலலிதா கடிதம் எழுதியுள்ளார்.
இதுதொடர்பாக மோடிக்கு முதல்வர் ஜெயலலிதா இன்று எழுதிய கடிதம்:
''குவைத் காவல்துறையினரால் பொய் வழக்கு பதிவு செய்யப்பட்டு அங்கு காவலில் உள்ள 11 இந்திய மீனவர்களின் அவலநிலை பற்றி தங்கள் கவனத்துக்குக் கொண்டு வர விரும்புகிறேன். கன்னியாகுமரி மாவட்டத்தைச் சேர்ந்த 10 பேரும், கேரளாவைச் சேர்ந்த ஒருவரும் ஆக மொத்தம் 11 பேர் கடந்தாண்டு ஜூலை மாதம் உசேன் ரஷீத், முகமது ரஷீத் ஆகியோரது ஏற்பாட்டின் பேரில் மீன்பிடி தொழில் செய்ய குவைத் சென்றனர்.

ஆறு மாதங்கள் மீன்பிடிப்பதற்கான நிபந்தனைப்படி, மீன்பிடி தொழிலில் ஈடுபட்ட இந்த மீனவர்களுக்கு உரிய பங்கு தரப்படவில்லை. இதனால் அங்கு பிழைப்பதற்கு வழியில்லாமல் சிரமப்படும் மீனவர்கள், தங்களை நம்பியுள்ள குடும்பத்தினருக்கு பணம் அனுப்பவும் முடியாமல் தவிக்கின்றனர்.
தங்களை வேலைக்கு அமர்த்தியவர்களிடம் இருந்து நியாயமான வருவாய் கிடைக்கும் என்ற நம்பிக்கையை இழந்துவிட்ட இந்த மீனவர்கள் தங்களை இந்தியாவுக்கு திருப்பி அனுப்பும்படி கோரினர். அதற்கு அவர்கள் மறுத்தனர். பின்னர் வேலை ஏற்பாட்டாளர்கள் கொடுத்த புகாரின் பேரில் உள்ளூர் போலீஸார் பொய் வழக்கு பதிவு செய்து 11 மீனவர்களையும் கைது செய்தனர்.
ஒரு மாதத்திற்குப் பிறகு மீனவர்கள் விடுவிக்கப்பட்ட போதிலும், மீனவர்களின் பாஸ்போர்ட்டை வேலை ஏற்பாட்டாளர்கள் தங்கள் வசம் வைத்துக் கொண்டனர். இதன் காரணமாக மீனவர்களால் குவைத்தில் மீன்பிடி தொழில் செய்யவோ, இந்தியாவுக்கு திரும்பவோ முடியவில்லை.
தமிழ்நாட்டைச் சேர்ந்த 10 மீனவர்களின் பரிதாப நிலையை கருத்தில் கொண்டு அவர்கள் இந்தியா திரும்புவதற்கான நடவடிக்கைகளை உடனடியாக எடுக்கும்படி குவைத்தில் உள்ள தூதரகத்துக்கு இந்திய வெளியுறுத்துறை அமைச்சகம் அறிவுறுத்தும்படி தாங்கள் உத்தரவிட வேண்டும். மீனவர்களுக்கான நியாயமான ஊதியம் கிடைக்கவும் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.
மீனவர்களின் பாதுகாப்பு குறித்து அச்சத்தில் இருக்கும் அவர்களது குடும்பத்தினர், வாழ்வாதாரத்துக்கு வழியின்றி வாடுவதால் இந்த விஷயத்தில் தாங்கள் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும்'' என்று ஜெயலலிதா தெரிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications