சசிகலாவை சின்னம்மா என்று அழைப்பதா?- திருவண்ணாமலை கூட்டத்தில் அதிமுக தொண்டர்கள் மோதல்
ஆரணியில் சசிகலாவை ஆதரித்து பேசிய அமைச்சர்களை அதிமுக தொண்டர்கள் தாக்க முயன்றதால் பரபரப்பு ஏற்பட்டது.
திருவண்ணாமலை : தமிழக முன்னாள் முதல்வரும் அதிமுக பொதுச்செயலாளருமான ஜெயலலிதா மரணமடைந்த பின்னர் கட்சியின் நிர்வாகிகள் பலரும் அதிமுக பொதுச்செயலாளராக சசிகலாவிற்கு அழைப்பு விடுத்து வருகின்றனர்.
அம்மா மரணமடைந்த பின்னர் சின்ன அம்மாதான் எல்லாமே என்று கூறி தினசரியும் நூற்றுக்கணக்கான நிர்வாகிகள் போயஸ் கார்டனில் சசிகலாவை சந்தித்து ஆதரவு கடிதம் அளித்து வருகின்றனர்.

திருவண்ணாமலை வடக்கு மாவட்ட அம்மா பேரவை சார்பில் ஆரணியில் கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் தமிழக அமைச்சர் ஆர்.பி.உதயகுமார், சேவூர் ராமசந்திரன், கடம்பூர் ராஜூ ஆகியோர் கலந்து கொண்டனர். அம்மா பேரவை மாநில செயலாளர் ஆர்.பி.உதயகுமார் பேசுகையில் சசிகலாவை சின்னம்மா என குறிப்பிட்டார்.
இதற்கு எதிர்ப்பு தெரிவித்த அதிமுக தொண்டர்கள் ரகளையில் ஈடுபட்டதால் மோதல் வெடித்தது. சசிகலாவுக்கு எதிர்ப்பு தெரிவித்தவர்களை கட்சியின் ஒரு பிரிவினர் அடித்து விரட்டினர். இதனால் பெரும் குழப்பம் ஏற்பட்டது.
சசிகலாவின் பேனர்களையும் அதிமுகவினர் கிழித்து எரிந்தனர். தமிழகம் முழுவதும் அதிமுக அமைச்சர்கள், நிர்வாகிகள் சசிகலாவுக்கு ஆதரவு திரட்டி வருகின்றனர்.












Click it and Unblock the Notifications