ஜெ.வின் பிரதமர் கனவை தகர்க்க முயல்கிறார் சோ... நடராஜன் பரபரப்புப் பேட்டி
சென்னை: பிரதமர் கனவில் உள்ள முதல்வர் ஜெயலலிதாவின் கனவைத் தகர்க்கும் வகையில் படு தீவிரமாக செயல்பட்டு வருகிறார் சோ என்று பரபரப்புப் பேட்டியளித்துள்ளார் ம.நடராஜன்.
இதுகுறித்து விகடனுக்கு அவர் அளித்துள்ள பேட்டியில் சோ மீது பயங்கரமாக பாய்ந்துள்ளார்.
நடராஜன் அளித்துள்ள பேட்டியிலிருந்து சில பகுதிகள்...

பாஸ்டனில் பேசினேன்
பிரிட்டனில் உள்ள கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகத்தில், சர்வதேச வாழ்வியல் சமூகத்தின் மாநாடு வருடத்துக்கு ஒருமுறை நடைபெறும். இந்த வருடம் அமெரிக்காவின் பாஸ்டன் நகரில் நடந்தது. 52 நாடுகளைச் சேர்ந்த பல்துறை வல்லுநர்களுடன் இந்தியா சார்பில் நான் கலந்துகொண்டு மனித உரிமைகள் பற்றி பேசினேன்.

கரும்புலிகளுக்கு வீர வணக்கம்
கனடாவில் உள்ள டொரொன்டோ நகரில், உலகத் தமிழர் பேரமைப்பு சார்பில் நடைபெற்ற கரும்புலிகள் தினத்தில் பங்கெடுத்து, ஈழத்துக்காக உயிரைத் தியாகம் செய்த கரும்புலிகளுக்கு வீர வணக்கம் செலுத்தினோம். அப்படியே வரும் வழியில் இருக்கும் பல நாடுகளில் அலுவல்ரீதியாகவும் மன மகிழ்ச்சிக்காகவும் பல நிகழ்ச்சிகளில் பங்கெடுத்தேன். தமிழக அரசியலில் இனி நடராசனின் அடுத்த கட்டப் பாய்ச்சலைப் பார்க்கலாம்.

மூன்றாவது அணி கலைந்து போகும் மேகம்
கடந்த 10 ஆண்டுகளில் நாட்டை அழிவுப் பாதைக்குக் கொண்டுசென்ற காங்கிரஸ், மதவாதக் கொள்கைகளைக் கொண்ட பாஜக, இரண்டு கட்சிகளுடனும் இனி கூட்டணி இல்லை என்று அதிமுக எப்போதோ அறிவித்துவிட்டது. இடதுசாரிகளின் மூன்றாவது அணி முயற்சியும் கலைந்துபோகும் மேகம் போலத்தான்.

வாலையும், தலையையும் காட்டும் கருணாநிதி
திமுக தலைவர் கருணாநிதி, வழக்கமான தனது ராஜதந்திரத்துடன் பாஜகவுக்கு வாலையும், காங்கிரஸுக்குத் தலையையும் காட்டிக் கொண்டிருக்கிறார். தேர்தலுக்குப் பிறகு இரண்டு கட்சிகளில் எதற்கு அதிக இடங்கள் கிடைக்கிறதோ, அவர்களுடன் ஒட்டிக்கொண்டு மத்திய அமைச்சரவையில் இடம்பிடிக்க வேண்டும் என்பது மட்டுமே அவருடைய திட்டம்.

வைகோ பாஜக பக்கம் சாய்வது போல தெரிகிறது
மதிமுக பொதுச் செயலாளர் வைகோ, இந்தத் தேர்தலில் பாஜகவின் பக்கம் சாய்வது போலத் தெரிகிறது. அது அவரது உரிமையாக இருக்கலாம். ஆனால், அண்ணா வழியில் வந்தவர்கள், திராவிடக் கொள்கையின் மேல் உண்மையான பற்றுக் கொண்டவர்கள் யாரும் பாஜகவோடு கூட்டு வைக்க மாட்டார்கள். அப்படியே கூட்டணி சேர்ந்தாலும் அவர்களால் அங்கு காலம் தள்ள முடியாது.

ஜெ.வாலேயே முடியலையே
அதனால்தான் ஜெயலலிதாவே 13 மாதங்களுக்கு மேல் அவர்களுடன் கூட்டணியில் தாக்குப்பிடிக்க முடியவில்லை. ஆனால், கருணாநிதியால் ஐந்து வருடங்கள் தாக்குப்பிடிக்க முடிந்தது என்றால், அதற்கு அவர் கொள்கைகளைக் காற்றில் பறக்கவிட்டுவிட்டு குடும்ப நலனை மட்டும் மனதில்கொண்டதுதான் காரணம்.

விஜயகாந்த் நண்பர்தான்...ஆனால் குழப்பமா இருக்கே
விஜயகாந்த் எனக்கு நல்ல நண்பர். ஆனால், அவர் கட்சிக்குப் பெயர் வைத்ததில் தொடங்கி, இன்று வரை அவருடைய எல்லா நடவடிக்கைகளிலும் ஒரு குழப்பம் இருக்கிறது. தேசிய முற்போக்கு திராவிடக் கழகம் என்று அவர் கட்சிக்கு பெயர் வைத்ததே பெரிய குழப்பம்.

அதெப்படி ஒருங்கிணைய முடியும்
தேசியமும் திராவிடமும் எப்போதும் ஒன்றிணைய முடியாது. அதேபோல் தன்னை கறுப்பு எம்.ஜி.ஆர். என்று அவர் அழைத்துக் கொள்வதையும் முதல் ஆளாக நான்தான் விமர்சனம் செய்தேன். அண்ணா என்றால் ஒருவர்தான். பெரியார் என்றால் ஒருவர்தான். அதேபோல் எம்.ஜி.ஆர். என்றாலும் ஒருவர்தான். அப்படி நீங்கள் சுயமாக ஓர் அடையாளத்தைத் தேடிக்கொள்ளுங்கள் என்றேன்.

செல்வாக்கு சரிகிறது
இப்படிப்பட்ட குழப்பங்களால், அவருடைய செல்வாக்கு ஒவ்வொரு நாளும் சரிந்துகொண்டுதான் இருக்கிறது. வரும் நாடாளுமன்றத் தேர்தல் அவருடைய கட்சிக்கு அக்னிப் பரீட்சை. அதில் அவர் தவறான கட்சியுடன் கூட்டணி வைத்தால், அவருடைய ஓட்டு வங்கி நான்கு சதவிகிதத்துக்குச் சரிந்துவிடும்!''

தனி மெஜாரிட்டி காலம் முடிந்து விட்டது
தனி மெஜாரிட்டியுடன் மத்தியில் ஆட்சி அமைத்த காலம் நேரு, இந்திரா மற்றும் ராஜீவ் காந்தியோடு முடிந்துவிட்டது. இனி மாநிலக் கட்சிகளின் தயவுடன் கூட்டணி அமைச்சரவைதான் அமைக்க முடியும்.

யாருக்குமே மெஜாரிட்டி கிடைக்காது
வரும் நாடாளுமன்றத் தேர்தலில், காங்கிரஸ், பாஜக இரண்டுக்குமே தனி மெஜாரிட்டி கிடைக்காது. மூன்றாவது அணி அமைவது அத்தனை எளிதான விஷயம் அல்ல. இப்படிப்பட்ட திரிசங்கு நிலையில் மத்தியில் ஆட்சி அமைக்க விரும்பும் யாராலும் அல்லது எந்தத் தேசியக் கட்சியானாலும், மாநிலக் கட்சிகளின் ஆதரவைத்தான் நம்ப வேண்டும். அப்போது அவர்கள் விதிக்கும் நிபந்தனைகளுக்குக் கட்டுப்பட்ட ஓர் ஆட்சிதான் மத்தியில் அமைய முடியும்.

அதிக இடம் பெறுபவரே ஆட்டுவிப்பார்
ஆக, எந்த மாநிலக் கட்சி நாடாளுமன்றத் தேர்தலில் அதிக இடங்களைப் பெறுகிறதோ, அதன் பிரதிநிதிதான் பிரதமரை ஆட்டுவிப்பார். அல்லது அவரேகூட பிரதமராக வருவார். அந்தப் பிரதிநிதி தமிழக முதல்வர் ஜெயலலிதாவாகக்கூட இருக்கலாம்.

ஜெயலலிதா துணிச்சலானவர்
ஜெயலலிதா துணிச்சலான முடிவுகளை உடனுக்குடன் எடுக்கக்கூடியவர். தன்னுடைய நோக்கத்தில் தடுமாற்றம் இல்லாதவர். எந்த நிலையிலும் தமிழகத்தின் உரிமைகளை விட்டுக் கொடுக்காதவர். அவர் நாட்டின் பிரதமராக வரும்போது, தமிழகத்தின் உரிமைகளையும் விட்டுக்கொடுக்க மாட்டார். இந்தியாவின் உரிமைகளையும் விட்டுக்கொடுக்க மாட்டார். அதனால் பிரதமர் பதவிக்கு அவர் பொருத்தமானவராக இருப்பார்.

மன்மோகனே பணியாற்றும்போது...
மன்மோகன் சிங்கே பிரதமராக பணியாற்றும்போது, இந்த நாட்டில் உள்ள யாராலும் பிரதமராகப் பணியாற்ற முடியும் என்றுதானே அர்த்தம். அப்போது ஜெயலலிதாவால் பல மடங்கு சிறப்பாகச் செயல்பட முடியும்.

நாங்கள் எங்கே அதிகாரம் செலுத்தினோம்...
நாங்கள் எங்கே போயஸ்கார்டனில் அதிகாரம் செலுத்தினோம்? ஊடகங்களும் முதல்வன் அரசியல் ஆலோசகர் என்று சொல்லிக்கொண்டு ஆதாயம் அடைந்துவரும் 'சோ'வும் சேர்ந்துதான் அப்படி ஒரு பிம்பத்தைச் சித்திரித்தார்கள்.

அவர்களாலேயே வெளியேற்றப்பட்டோம்
எந்தக் கட்சியை நாங்கள் உயிர் மூச்சாக நினைத்தோமோ, அந்தக் கட்சியில் யாரை முன்னணிக்குக் கொண்டுவரப் பாடுபட்டோமோ... அவராலேயே வெளியேற்றப்பட்டோம். எங்கள் குடும்பத்தினர் மீது வரிசையாக வழக்குகள் போடப்பட்டன. ஆனால், எதையாவது நிரூபிக்க முடிந்ததா? முடியவில்லையே!

சதிகலா பழியேற்றார்
சசிகலாவும் நாங்களும் இருந்தால், ஜெயலலிதாவை இல்லாமல் ஒழித்துவிடுவோம். கட்சியை அழித்துவிடுவோம் என்றார்கள். ஆனால், பெங்களூரு வழக்கில் என்ன நடந்தது? நடந்த அனைத்துக்கும் நான்தான் பொறுப்பு என்று எல்லாப் பழியையும் சசிகலா ஏற்றுக்கொண்டார். எனக்கும் அதற்கும் சம்பந்தம் இல்லை என்று ஒதுங்கியா கொண்டார்? இல்லை கட்சியை அழித்துவிட்டாரா?''

சோவுக்கு காழ்ப்புணர்ச்சி
ஜெயலலிதாவைச் சுற்றி சசிகலா நடராஜன் குடும்பத்தினர் மட்டும்தான் இருக்கிறார்கள். நம்மால் நெருங்க முடியவில்லை என்ற காழ்ப்புணர்ச்சி சோவிடம் உள்ளது. ஆனால், எங்களுக்கு எவ்வளவுதான் துன்பம் வந்தாலும் நாங்கள் ஒரு நாளும் அதிமுகவுக்கோ அதன் தலைமைக்கோ எதிராகச் செயல்பட மாட்டோம். ஆனால், சோ என்ன அப்படியா?

சோ பேச்சுதான் பிரதமர் கனவை விதைத்தது
கடந்த ஒன்றரை ஆண்டுகளுக்கு முன்பு, ஒரு பக்கம் அத்வானியையும் மறுபக்கம் நரேந்திர மோடியையும் வைத்துக்கொண்டு ஜெயலலிதாவுக்கு பிரதமராகும் அனைத்துத் தகுதிகளும் உள்ளன என்று பேசினார். அவருடைய அந்தப் பேச்சுதான், ஜெயலலிதாவிடம் பிரதமர் கனவை விதைத்தது.

ஆசை காட்டி விட்டு மோசம் பண்ணுகிறார்
ஜெயலலிதாவுக்கு பிரதமர் ஆகும் எல்லாத் தகுதிகளும் உள்ளன என்று தொடர்ந்து பேசி ஆசையை வளர்த்தவர், அதன் மூலம் பல ஆதாயங்களை அடைந்தார். ஆனால், திடீரென கடந்த வாரம், ஜெயலலிதா பிரதமராக வர முடியாது என்று பேட்டி அளிக்கிறார். ஜெயலலிதாவின் பிரதமர் கனவை காலி பண்ணும் எண்ணம் இது. இவரை எப்படி நம்பிக்கைக்குரிய மனிதராக சம்பந்தப்பட்டவர்கள் நினைக்கிறார்கள் என்று தெரியவில்லை.

அதிமுகவிலிருந்து அழைப்பு வரவில்லை
அதிமுக உள்பட எங்கிருந்தும் எனக்கு எந்த அழைப்பும் வரவில்லை. உடைந்தது உடைந்ததாகவே இருக்கிறது. அவர்கள் என் மீது போட்ட வழக்குகள் நிலுவையில் உள்ளன. நாம் பாடுபட்டு வளர்த்த கட்சி. பல இன்னல்களை அனுபவித்து அந்த அம்மாவை முன்னுக்குக் கொண்டுவந்தோம். எனவே, அங்கு நமக்கு இன்னும் ஒட்டுறவு இருக்கிறது என்ற நினைப்பு எனக்குள் இருந்தது. அவைதான் தடைகள் என்று சொன்னேன். அந்தத் தடைகள்தான் தற்போது உடைந்துவிட்டன.

நான் சுதந்திர மனிதன்
இப்போது நான் சுதந்திர மனிதனாக இருக்கிறேன். அந்தச் சுதந்திரத்தைக்கொண்டு நாடாளுமன்றத் தேர்தல் சமயத்தில் சில காரியங்களை நிகழ்த்துவேன் என்றார் நடராஜன்.












Click it and Unblock the Notifications