தூத்துக்குடி அருகே 2 கிராமத்தினரிடையே மோதல்: போலீஸ் குவிப்பு
தூத்துக்குடி: தூத்துக்குடி அருகே இரண்டு கிராமத்தினர் திடீரென மோதிக் கொண்டது அங்கு பதட்டத்தை ஏற்படுத்தியுள்ளது.
தூத்துக்குடி மாவட்டம் ஆழ்வார்திருநகரி அருகே உள்ள மளவராய்நத்தத்தை சேர்ந்தவர் வெள்ளத்துரை. அவர் இரவு ஆழ்வார்திருநகரி சென்று விட்டு பைக்கில் ஊர் திரும்பிக் கொண்டிருந்தார். ஆதிநாதபுரம் ரயில்வே கேட் அருகே சென்ற போது அங்கு அமர்ந்திருந்த ரத்னபுரி பகுதியை சேர்ந்த செல்வகுமார், பிரபு, சண்முகராஜ், மகேஷ் ஆகியோருக்கும் வெள்ளத்துரைக்கும் இடையே தகராறு ஏற்பட்டது.
ஆத்திரம் அடைந்த அவர்கள் வெள்ளத்துரையை தாக்கினர். இது குறித்து வெள்ளத்துரை ஊரில் சென்று தெரிவித்தார். இதையடுத்து அந்த கிராமத்தை சேர்ந்த கருப்பசாமி, பூல்பாண்டி, வெள்ளைபாண்டி, சங்கரபாண்டி, வேல்பாண்டி, குமார், சுரேஷ், பிரேம், சரவணன், வேல்குமார், முத்து, முத்துராமலிங்கம், பலவேசம், தங்கையார், சுப்பையா, சுடலை உள்ளிட்ட 23 பேர் அருகே உள்ள ஆதிநாதபுரத்திற்கு திரண்டு வந்தனர். அவர்கள் அங்குள்ள வீடுகளை கற்களை கொண்டு தாக்கினர். திடீரென வீடுகளில் நள்ளிரவில் கற்கள் வீசிப்பட்டதால் திடுக்கிட்ட பொதுமக்கள் அங்கு விரைந்து வந்து கற்களை வீசியவர்களை விரட்டி அடித்தனர்.
இது குறித்து ஆழ்வார்திருநகரி போலிசில் இரு தரப்பினரும் புகார் செய்தனர். வெள்ளத்துரை புகாரின் பேரில் செல்வகுமார் உள்பட 4 பேரை போலீசார் தேடி வருகின்றனர். ஆதிநாதபுரத்தை சேர்ந்த செல்லத்துரை என்பவர் கொடுத்த புகாரின் பேரில் கருப்பசாமி உள்ளிட்ட 23 பேர் மீதும் போலீசார் வழக்குப்பதிவு செய்து தேடி வருகின்றனர்.
தூத்துக்குடி எஸ்பி அஸ்வின் கோட்னீஸ் அங்கு வந்து விசாரணை நடத்தினார். அங்கு பதற்றம் நீடிப்பதால் ஸ்ரீவைகுண்டம் டிஎஸ்பி மாதவன் தலைமையிலான போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.












Click it and Unblock the Notifications