ஓபிஎஸ், தினகரன் ஆதரவாளர்களிடையே கைகலப்பு.. போலீஸ் குவிப்பால் ஆர்.கே.நகரில் பதட்டம்
ஆர்கே நகர் தொகுதியில் தினகரன் மற்றும் பன்னீர்செல்வம் ஆதரவாளர்களிடையே கைகலப்பு ஏற்பட்டதால் பதட்டம் நிலவி வருகிறது.
சென்னை: ஆர்.கே. நகர் தொகுதியில் டிடிவி தினகரன் மற்றும் ஓ.பன்னீர்செல்வம் ஆதரவாளர்களிடையே கைகலப்பு ஏற்பட்டதால் அங்கு ஏராளமான போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர். இதனால் அப்பகுதியில் பதட்டம் நிலவி வருகிறது.
ஜெயலலிதா மறைவடைந்ததை அடுத்து அவர் போட்டியிட்டு வெற்றி பெற்ற ஆர்கே நகர் தொகுதி காலியானது அறிவிக்கப்பட்டது. அந்த தொகுதிக்கு வரும் 12 ஆம் தேதி இடைத் தேர்தல் நடைபெற உள்ளது.
சசிகலா அதிமுக, பன்னீர்செல்வம் அதிமுக என அதிமுக கட்சி பிளவு பட்டுள்ளதால், இந்த தொகுதியில் அதிமுக அம்மா கட்சி (சசிகலா) சார்பில் டிடிவி தினகரனும், அதிமுக புரட்சித்தலைவி அம்மா (ஓபிஎஸ்) அணி சார்பில் மதுசூதனனும் போட்டியிடுகின்றனர்.
அதிமுக அம்மா கட்சி வேட்பாளர். டி.டி.வி. தினகரன் எப்படியாவது வெற்றி பெற்று முதல்வர் பதவியை பிடித்து விட வேண்டும் என்ற ஆசையில் இருந்து வருகிறார். அவருக்கு ஆதரவாக 30 அமைச்சர்கள், 30 எம்பிக்கள், 100க்கும் மேற்பட்ட எம்எல்ஏக்கள், அனைத்து மாவட்ட செயலாளர்கள் என அனைவரும் தொகுதியில் முகாமிட்டுள்ளனர்.
இந்நிலையில், தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டிருந்த தினகரன் மற்றும் பன்னீர்செல்வம் ஆதரவாளர்களிடையே திடீரென கைகலப்பு ஏற்பட்டுள்ளது. இதனால், அங்கு போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர். சுமார் 500-க்கும் மேற்பட்ட போலீசார் ஆர்கே நகரில் குவிக்கப்பட்டுள்ளதால் பதட்டம் நிலவி வருகிறது.