முதல்வர் அணியினர் தினகரன், சசிகலா பற்றி தவறான தகவல் பரப்புகிறார்கள்: செந்தில் பாலாஜி புகார்!
முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அணியினர், சசிகலா மற்றும் தினகரன் குறித்து தவறான தகவல்களை பரப்பி வருகிறார்கள் என்று,தினகரன் ஆதரவு அணி எம்.எல்.ஏ. செந்தில்பாலாஜி புகார் தெரிவித்துள்ளார்.
புதுச்சேரி: முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அணியினர், சசிகலா மற்றும் தினகரன் குறித்து தவறான தகவல்களை பரப்பி வருகிறார்கள் என்று,தினகரன் ஆதரவு அணி எம்.எல்.ஏ. செந்தில்பாலாஜி புகார் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக இன்று புதுச்சேரியில் செய்தியாளர்களிடம் செந்தில்பாலாஜி பேசுகையில், எனது தொகுதியில் சிலரின் தூண்டுதலின் பேரிலேயே காணவில்லை என போஸ்டர் ஒட்டியுள்ளனர். எங்கிருந்தாலும் தொகுதிக்கான செயல்பாடுகள் தொய்வின்றி நடக்கும்.
சசிகலா, தினகரன் குறித்து முதலமைச்சர் அணியினர் தவறான தகவலை தெரிவித்து வருகின்றனர். கட்சியை காப்பாற்றும் அண்ணன் தினகரனின் நடவடிக்கைகளுக்கு உறுதியாக அவர் பின்னால் இருக்கிறோம்.
சபாநாயகரின் கடிதம் இன்னும் வரவில்லை கடிதம் கிடைத்த பின் சட்ட வல்லுநர்களுடன் ஆலோசித்து, அடுத்தக்கட்ட நடவடிக்கைகள் குறித்து முடிவெடுக்கப்படும்" என்றார்.
இதே போல எம்.எல்.ஏ. தங்க தமிழ்ச்செல்வன் கூறுகையில், வின் ப்ளவர் விடுதி அறைகள் 2 நாட்களுக்கு முன்பதிவு செய்யப்பட்டதால் வேறு விடுதிக்கு மாறுகிறோம். தினகரன் இன்று புதுச்சேரி வருகிறார், அவருடன் ஆலோசித்து முடிவு எடுக்கவுள்ளோம்" என்று தெரிவித்தார்.